உள்ளக விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்தால் குடியுரிமை பறிப்பு – பரணகம ஆணைக்குழு பரிந்துரை
முன்மொழியப்பட்ட உள்நாட்டு பொறுப்புக்கூறும் செயல்முறைகள் மற்றும் போருக்குப் பிந்தைய நல்லிணக்க செயல்முறைகளுக்கு ஒத்துழைக்க மறுப்பவர்களின் குடியுரிமையைப் பறிக்க, காணாமற்போனோர் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட மக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.
காணாமற்போனோர் குறித்து விசாரிக்க, மகிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான அதிபர் ஆணைக்குழுவின், இரண்டாவது ஆணைக்கான அறிக்கை கடந்தவாரம் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையிலேயே, உள்நாட்டு விசாரணைகள் மற்றும் நல்லிணக்க செயல்முறைகளுக்கு ஒத்துழைக்க மறுப்பவர்களுக்குத் தண்டனை விதிக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இத்தகையவர்களுக்கு, அபராதம் விதிக்கலாம். அவர்களின் குடியுரிமையை விலக்கிக் கொள்ளலாம். சிறைத்தண்டனை விதிக்கலாம். அல்லது இந்த தண்டனைகளை கலந்தும் விதிக்கலாம் என்றும் பரணகம ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.
இந்தப் பரிந்துரைக்கு, சேர் டெஸ்மன் டி சில்வா தலைமையிலான அனைத்துலக நிபுணர் குழுவும் ஆதரவு தெரிவித்துள்ளது.