சவூதியில் அனோஜனுக்கு மரணதண்டனை – உன்னிப்பாக கவனிக்கிறதாம் சிறிலங்கா
சவூதி அரேபியாவில் இலங்கையரான அனோஜன் சிவராசாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் கூறியுள்ள நிலையில், அவரது வழக்கை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொழும்பில் உள்ள சவூதி அரேபிய தூதரகத்துடன் இணைந்து ரியாத்தில் உள்ள சிறிலங்கா தூதரகம் தொடர்ந்து முன்னேற்றங்களை கண்காணித்து வருவதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு நேற்று மாலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.
சவூதி அதிகாரிகளுடன் இராஜதந்திர வழிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் சிவராசாவின் நலன்களைப் பாதுகாப்பதற்கும் அவருக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கும் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், அறிக்கை மரண தண்டனையை உறுதிப்படுத்தவில்லை அல்லது அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள், அவரது மேல்முறையீட்டின் முடிவு அல்லது அவரது தற்போதைய சட்ட நிலை பற்றிய விவரங்களை வழங்கவில்லை.
சவூதி அரேபியாவில் பணிபுரியும் போது அனோஜன் சிவராசா வெளியிட்டதாகக் கூறப்படும் சமூக ஊடகக் கருத்து இஸ்லாத்தையும் முஹம்மது நபியையும் இழிவுபடுத்துவதாகக் கருதப்பட்டதாகக் கூறப்படும் ஒரு சமூக ஊடகக் கருத்திலிருந்து இந்த வழக்கு உருவாகியுள்ளது.
அவரது குடும்பத்தினரின் கூற்றுப்படி, சிறிலங்காவில் உள்ள மத சமூகங்கள் சம்பந்தப்பட்ட இணைய கருத்து மோதலின் போது இந்த கருத்து வெளியிடப்பட்டது.
ஜூலை 15 ஆம் நாள் சவூதி நீதிமன்றம் அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் மூன்று மில்லியன் ரியால் அபராதமும் விதித்தது.
அவரது சட்டவாளர் தண்டனையை குறைக்கக் கோரி, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் ஆதரவுடன், தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்தார்.
அவரது குடும்பத்தினரின் கூற்றுப்படி, தண்டனை மரணதண்டனையாக அதிகரிக்கப்பட்டதாக அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா தூதரகம் முறையான எழுத்துப்பூர்வ தீர்ப்புக்காகக் காத்திருக்கிறது, இது அறிவிக்கப்பட்ட முடிவிற்கான சட்ட அடிப்படையை தெளிவுபடுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இந்த விடயத்தில் தலையிட்டு, அனோஜனின் விடுதலைக்கு சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வலியுறுத்தியுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம், இந்த வழக்கை சிறிலங்கா அரசாங்கம் கையாளும் விதம் குறித்து கவலை வெளியிட்டுள்ளதுடன், அனோஜன் சிவராசாவின் உயிரைக் காப்பாற்ற அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
சமூக ஊடகங்களில் அவர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சிறிலங்கா தூதரகத்தின் மதிப்பீட்டின்படி, வெற்றிக்கான வாய்ப்புகள் “மிகவும் குறைவு” என்று விவரிக்கப்பட்ட போதிலும், பிரதி வெளி விவகார அமைச்சர் அருண் ஹேமச்சந்திராவின் ஆலோசனையின் அடிப்படையில் குடும்பத்தினர் மேல்முறையீட்டைத் தொடர்ந்தனர்.
அதற்கமைய அவரது குடும்பம் சட்டக் கட்டணமாக ர 1,890,766 ரூபாவை வெளிவிவகார அமைச்சின் செயலாளரின் அறிவுறுத்தலுக்கு அமைய, குறிப்பிட்ட கணக்கிற்கு செலுத்தியுள்ளது.
வெளிவிவகார அமைச்சின் தூதரகப் பிரிவின் ஆவணங்கள் ஓகஸ்ட் 24 அன்று மேல்முறையீடு செய்யப்பட்டதாகக் காட்டுகின்றன, ஆனால் முந்தைய அணுகலுக்கான பலமுறை கோரிக்கைகள் இருந்தபோதிலும், மேல்முறையீட்டை குடும்பத்திற்கு அனுப்பும் அமைச்சின் கடிதம் செப்ரெம்பர் 16 நாளிடப்பட்டுள்ளது.
மேல்முறையீடு சட்டவாளர் அட்லான் அப்துல்லா அல்-சுபையை ஆலோசகராக அடையாளம் காட்டியதாகவும், ஆனால் அவரது அடையாளம் அல்லது தொடர்பு விவரங்கள் தெரியாமல் வேறு ஒரு சட்டவாளர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியதாக குடும்பத்தினர் கூறுகின்றனர்.
நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டவாளரைத் தேர்ந்தெடுத்து அறிவுறுத்தியது யார், சட்டக் கட்டணம் எவ்வாறு வழங்கப்பட்டது, மேன்முறையீட்டு ஆவணங்கள் குடும்பத்திற்கு ஏன் வழங்கப்படவில்லை என்று சாணக்கியன் இராசமாணிக்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.
