சபாநாயகர் பதவி விலகமாட்டார் – என்பிபி பொதுச்செயலாளர் அறிவிப்பு
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதால், அவர் பதவி விலக வேண்டிய அவசியமில்லை என்று தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் நிஹால் அபேசிங்க தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பு பேரவையின் தலைவரான சபாநாயகர், இந்த விசாரணையை கருத்தில் கொண்டு பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சியினர் விடுத்து வரும் கோரிக்கைகள் குறித்து கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
குற்றச்சாட்டை எவரும் சுமத்தலாம், அதற்காக பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை.
விசாரணை நடத்தப்பட்டு அதன் முடிவு வெளியாகிய பின்னர் தான் எந்த தீர்மானமும் எடுக்கப்படும் என்றும் தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் நிஹால் அபேசிங்க மேலும் கூறியுள்ளார்.
இதற்கு முன்னர் இதுபோன்ற சூழ்நிலை இருந்ததில்லை என்றும், சபாநாயகர் விக்ரமரத்ன மீதான இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் விசாரணை முன்னெப்போதும் இல்லாதது என்றும் எதிர்க்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
