தமிழ் அரசுக் கட்சியை விட்டு வெளியேறமாட்டேன்- சிறிதரன் உறுதி
கட்சிக்குள் தமக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளால் தான், தமிழ் அரசு கட்சியை விட்டு ஒருபோதும் வெளியேறப் போவதில்லை என்று, இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின்னரான அரசியல் சூழ்நிலைகள் குறித்து, தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தமக்கு எதிராக திட்டமிட்ட ரீதியில் கட்சிக்குள் ஒரு தரப்பினர் செயற்படுவதாகவும், தம்மை கட்சியில் இருந்து வெளியேற்றும் நோக்கில் உளவியல் ரீதியான தாக்குதல் நடவடிக்கைகளை இரண்டு ஆண்டுகளாக அவர்கள் முன்னெடுத்து வருவதாகவும் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பு பேரவையில் சிறிலங்கா இராணுவத்திற்கு ஆதரவாக தாம் எட்டு தடவைகள் வாக்களித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரித்த அவர், அதனை நிரூபித்தால் தான் அரசியலில் இருந்து வெளியேற தயாராக இருப்பதாகவும், இது தொடர்பாக கட்சி சுயாதீனமான ஒரு விசாரணைக் குழுவை நியமித்தால் அதற்கு ஒத்துழைக்க தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தாம் நாடாளுமன்ற குழு தலைவர் பதவிக்காக சண்டையிட போவதில்லை என்றும் , தேவேளை தம்மை கட்சியிலிருந்து வெளியேற்ற நினைக்கும் தரப்புகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் கட்சியை விட்டு வெளியேறமாட்டேன் என்றும் கட்சிக்குள் இருந்து போராட போவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியில் இருந்து தம்மை நீக்குவதாக அரசியல் குழு தீர்மானம் எடுத்துள்ளது என்றால், சாணக்கியனை அந்தப் பதவியில் நியமிக்கும் முடிவை எந்தக் குழுவில் தீர்மானம் எடுக்கப்பட்டது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமக்கு எதிராக தமிழ் அரசுக் கட்சிக்குள் சுமந்திரன் தரப்பினரால் முன்னேறக்கப்பட்டு வருகின்ற பல்வேறு நடவடிக்கைகளையும் சிறிதரன் இந்த செவ்வியில் விவரித்துக் கூறியுள்ளார்.
