மேலும்

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கான நிதிக்கு இந்தியா நிபந்தனை

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்காக இந்தியா வழங்கிய 62 மில்லியன் டொலர் கடனை கொடையாக மாற்றுவதற்கு இந்தியா நிபந்தனைகளை விதித்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித ருவான் கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.

காங்கேசன்துறை துறைமுகத்தின் அபிவிருத்திக்காக இந்தியா 62 மில்லியன் டொலர்களுக்கு மேல் வழங்கியிருந்தாலும், அந்தத் தொகை தற்போது கடனாகவே வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இதை கொடையாக மாற்றுவதற்கு, இந்திய அரசாங்கத்தால்  குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அந்த நிபந்தனைகள் குறித்து இன்னும் கலந்துரையாடப்பட்டு வருகின்றன.

அதேவேளை, குறித்த துறைமுகத்தை மேம்படுத்துவதன் தாக்கங்களை மதிப்பிடுவதற்கான சமூக-பொருளாதார தாக்க ஆய்வு தொடங்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா துறைமுக அதிகாரசபை தற்போது அந்த ஆய்வை நடத்தி வருகிறது.

ஒரு துறைமுகம் நிறுவப்படும் போது, ​​அதன் சமூக-பொருளாதார தாக்கத்தை நாம் பார்க்க வேண்டும்.

அது இறுதி செய்யப்பட்டவுடன், தேவையான பேச்சுவார்த்தைகளைத் தொடங்கி அதற்கேற்ப முன்னேறுவோம்,” என்றும் அவர் கூறியுள்ளார்.

பிராந்திய இணைப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, முந்தைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில், காங்கேசன்துறை துறைமுகத் திட்டத்திற்கான 62 மில்லியன் டொலர் கடனை  இந்தியா முதலில் வழங்கியது.

பின்னர்  அரச தலைவர் அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தற்போதைய நிர்வாகத்தின் கீழ் இந்த சலுகை கொடையாக புதுப்பிக்கப்பட்டது.

இருப்பினும், இந்தத் திட்டத்தைத் தொடரலாமா வேண்டாமா என்பது குறித்து சிறிலங்கா அரசாங்கம் இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை என்று அண்மையில் அமைச்சர்கள் கூறியிருந்தனர்.

சுமார் 16 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட காங்கேசன்துறை துறைமுகம் நீண்ட வரலாற்றைக் கொண்டது.

சிமெந்து  தொழிற்சாலையுடன் இணைந்து வணிகத் துறைமுகமாக செயற்பட்டு வந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *