மேலும்

திருமலையில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்த உதவியுள்ள என்பிபி அரசு

மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த திருகோணமலை மாவட்டத்தில் முதலீடுகளை விரிவுபடுத்த இந்தியாவை அனுமதித்துள்ள தேசிய மக்கள் சக்தி  அரசாங்கத்தை முன்னிலை  சோசலிசக் கட்சியின் செயற்பாட்டாளர் வசந்த முதலிகே கடுமையாக சாடியுள்ளார்.

திருகோணமலையில் நடந்த ஒரு கூட்டத்தில் உரையாற்றிய அவர், பல தசாப்தங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்ட திருகோணமலை எண்ணெய் தாங்கிப் பண்ணைத் திட்டம் மற்றும் அண்மைய திட்டங்களுக்கு என்பிபி அரசாங்கம் எவ்வாறு துணிச்சலுடன் உதவியது என்பதை விளக்கினார்.

திருகோணமலை சீனக்குடாவில் உள்ள விமானப்படைத் தளத்திற்கு சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க வருகை தந்த போதும், முன்னிலை சோசலிசக் கட்சி அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியது.

இந்திய திட்டங்களால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் கவலைகளை வெளிப்படுத்தும் கடிதத்தை சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவிடம் ஒப்படைக்க முயன்ற போது,  காவல்துறையினர் அதனைத் தடுத்ததாக வசந்த முதலிகே குற்றம்சாட்டினார்.

பல ஆண்டுகளாக ஜேவிபி மற்றும் என்பிபி கூறி வருவதற்கு மாறாக, சிறிலங்காவிற்கு விரோதமான ஒரு நிகழ்ச்சி நிரலை என்பிபி அரசாங்கம் பின்பற்றுகிறது என்றும், அவர் தெரிவித்துள்ளார்.

நிலத்தை கையகப்படுத்துவதன் மூலம், திருகோணமலையில் இந்தியா தனது நிலையை உறுதிப்படுத்த என்பிபி அரசாங்கம் அனுமதித்ததாகவும், மக்களுக்கு எதுவும் மிச்சமில்லை என்றும் முதலிகே திருகோணமலை கூட்டத்தில் கூறியுள்ளார்.

அதேவேளை, சர்ச்சைக்குரிய காற்றாலை மின் திட்டங்களுக்கு எதிராக மக்கள் போராட்டங்களைத் தொடங்கிய மன்னார் மாவட்டத்தில் அரசாங்கம், இதேபோன்ற ஒரு உத்தியைக் கடைப்பிடித்ததாக,  முன்னிலை சோசலிசக் கட்சியின் பேச்சாளர் புபுது ஜயகொட குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த  என்பிபி நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் வெளிப்படையான காரணங்களுக்காக மக்களின் சார்பாகப் பேசவில்லை.

விளைவுகளைப் பொருட்படுத்தாமல், அரசாங்கம் இந்தியாவை சமாதானப்படுத்துவதில் குறியாக இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *