வோல்கர் டர்க்கை சந்திக்கும் போர்க்குற்றவாளிகளின் முயற்சி தோல்வி
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க்கை சந்திப்பதற்கு, போர்க்குற்றம் சாட்டப்படும் சிறிலங்கா படை அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.
அண்மையில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த போது, போர்க்குற்றம்சாட்டப்பட்டவர்களின் சார்பில் முன்னாள் படை அதிகாரிகள் குழுவொன்று அவரைச் சந்திக்க முயன்றது.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் ஊடாகவும் இந்தச் சந்திப்புக்கு நேரம் ஒதுக்கித் தருமாறு அவர்களால் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
சிறிலங்கா கடற்படையின் முன்னாள் பேச்சாளரும், கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு உள்ளிட்டவற்றில் தொடர்புடையவர் என குற்றச்சாட்டு சுமத்தப்படுபவருமான றியர் அட்மிரல் டி.பி.கே.தசநாயக்க, இறுதிப்போரில் 57 ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாக இருந்தவரும் போர்க்குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளவருமாறு மேஜர் ஜெனரல் ஜி.வி.ரவிப்பிரிய ஆகியோரே ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரைச் சந்திக்க முயன்றிருந்தனர்.
எனினும், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் தரப்பில் இருந்து எந்தப் பதிலும் கொடுக்கப்படாததால், இவர்களின் இந்த முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.