இந்திய – சிறிலங்கா தரைப்பால திட்டத்துக்கு இணங்கவில்லை- விஜித ஹேரத்
சிறிலங்காவை இந்தியாவுடன் இணைக்கும் தரைவழிப் பாலத்திற்கோ அல்லது திருகோணமலை வரையான நெடுஞ்சாலை நீடிப்பிற்கோ சிறிலங்கா அரசாங்கம் உடன்படவில்லை என்று, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி கலந்துரையாடல் நிகழ்வு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“இராமேஸ்வரம் மற்றும் மன்னார் இடையேயான பாலம் அமைக்கும் திட்டத்துக்கும் நாங்கள் உடன்படவில்லை.
திருகோணமலையை ஒரு மின் கேந்திரமாக அபிவிருத்தி செய்ய நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம். ஆனால் தரைப்பால இணைப்பை ஏற்றுக் கொள்ளவில்லை.
சிங்கப்பூர் – மலேசியா இடையேயான பாலம் போன்ற திட்டங்கள் வெற்றி பெறுகின்றன. ஏனெனில் இரு நாடுகளும் பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் ஒத்தவை.
சிறிலங்காவைப் பொறுத்தவரை, பொருளாதார மற்றும் அரசியல் பின்னணிகள் மிகவும் வேறுபட்டவை.
இதுபோன்ற சூழ்நிலைகளில், பால இணைப்புக்கு ஒப்புக்கொள்வது சிக்கல்களை ஏற்படுத்துகிறது. இந்த நேரத்தில், நாங்கள் அதற்கு உடன்படவில்லை.
இந்தியாவுடன் எந்த பாதுகாப்பு உடன்பாடும் கையெழுத்திடப்படவில்லை. இந்தியப் பிரதமரின் வருகையின் போது கையெழுத்திடப்பட்டது, பாதுகாப்பு உதவி குறித்த புரிந்துணர்வு உடன்பாடு ஆகும்.
இது இராணுவப் பயிற்சி, தகவல் பகிர்வு மற்றும் போதைப்பொருள் கடத்தல், பயங்கரவாதம் மற்றும் மனித கடத்தல் போன்ற துறைகளில் ஒத்துழைப்பில் கவனம் செலுத்துகிறது.
இது அமெரிக்காவினால் முன்மொழியப்பட்ட அக்சா (ACSA) எனப்படும், கையகப்படுத்தல் மற்றும் குறுக்கு சேவை உடன்பாடு போன்றது அல்ல.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களின் போது, உதவிய புலனாய்வுப் பகிர்வு போன்ற தற்போதைய நடைமுறைகளை இந்த உடன்பாடு, முறைப்படுத்துகிறது.
சிறிலங்காவின் இராணுவம் மற்றும் விமானப்படைக்கு இந்தியா ஏற்கனவே பயிற்சி மற்றும் உதவிகளை வழங்கியுள்ளது.
புதிய புரிந்துணர்வு உடன்பாடு, அத்தகைய ஒத்துழைப்பை குறிப்பாக தொழில்நுட்பம் மற்றும் தகவல் பகிர்வு போன்றவற்றை முறைப்படுத்தும். என்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார்.