எவ்பிஐ அறிக்கையை நிராகரித்தால் ட்ரம்ப் கோபப்படக் கூடும் – ரணில் எச்சரிக்கை
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான, அமெரிக்காவின் மத்திய புலனாய்வு பிரிவின் (FBI) கண்டறிவுகளை நிராகரித்தால், டொனால்ட் ட்ரம்ப் எதிர்மறையாக பதிலளிக்கக் கூடும் என்று, சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எச்சரித்துள்ளார்.
நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட அவர்,
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னால், சஹ்ரான் காசிம் தான் மூளையாக செயற்பட்டார் என்று, எவ்பிஐ விசாரணையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
சிறிலங்கா வேறொரு கதையை ஊக்குவிக்க முயன்றால், அப்போது அமெரிக்காவில் ஆட்சியில் இருந்த, இப்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை கோபப்படுத்தக் கூடும்.
அவர் உக்ரைனின் தலைமையை நடத்தியது போல, அதிக வரிகளை விதிப்பதன் மூலமோ, அல்லது இராஜதந்திர நடவடிக்கை எடுப்பதன் மூலமோ எதிர்வினையாற்றக் கூடும்.
ஈஸ்டர் தாக்குதல்களுக்குப் பின்னர், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் என்னிடம் தனிப்பட்ட முறையில் பேசியிருந்தார்.
அந்த நேரத்தில், ட்ரம்ப் எவ்பிஐ விசாரணை உதவி உட்பட அனைத்து உதவிகளையும் வழங்கினார்.
அமெரிக்க தூதுவரை நான் சந்தித்த போது, ஒரு எவ்பிஐ முகவரும் அதில் கலந்து கொண்டார்.
ஸ்காட்லன்ட்யார்டும் வந்தது, பிரித்தானியாவும் விசாரைணைக்கு உதவி வழங்கியது.
இப்போது, டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் ஜனாதிபதியாகியுள்ள நிலையில், இதை மீண்டும் ஒருமுறை நாம் குழப்பினால், என்ன நடக்கும்?
ஜனாதிபதி ட்ரம்பை கோபப்படுத்துவதன் விளைவுகள் எப்படியிருக்கும்? எங்களால் எதுவும் செய்ய முடியாது என்றும் ரணில் விக்கிரமசிங்க எச்சரித்துள்ளார்.