கொழும்பு டொக்யார்ட் நிறுவனத்துக்குள் கால் வைக்கிறது இந்தியா
கொழும்பு டொக்யார்ட் நிறுவனத்தில் உள்ள, 51சதவீத உரிமைப் பங்குகளை, ஜப்பானின் ஓனோமிச்சி டொக்யார்ட் நிறுவனம், இந்திய நிறுவனத்துக்கு விற்பனை செய்வதை தடுக்குமாறு, முன்னிலை சோசலிசக் கட்சி சிறிலங்கா அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.
சிறிலங்காவில் உள்ள சர்வதேச கப்பல் கட்டும் மற்றும் பழுதுபார்க்கும் நிறுவனமான கொழும்பு டொக்யார்ட் நிறுவனத்தின் நிதி நிலை மோசமடைந்து வருவதால், ஜப்பானிய நிறுவனம், அதன் உரிமைப் பங்குகளை விற்கப் போவதாக கொழும்பு டொக்யார்ட் நிறுவனத்தின் பணிப்பாளர் சபைக்கு கடந்த டிசெம்பரில் அறிவித்திருந்தது.
இந்திய அரசுக்குச் சொந்தமான, முன்னணி கப்பல் கட்டும் நிறுவனமான மும்பையில் உள்ள மசகான் டொக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட் நிறுவனத்துக்கே, ஜப்பானிய நிறுவனம் தனது உரிமைப் பங்குகளை விற்கவுள்ளதாகவும் இதனைத் தடுக்குமாறும், முன்னிலை சோசலிச கட்சியின் பேச்சாளர் புபுது ஜாகொட வலியுறுத்தியுள்ளார்.
இந்திய அரசாங்கத்துக்குச் சொந்தமான மசகான் டொக் ஷிப் நிறுவனம், போர்க்கப்பல்கள் மற்றும் தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்குவதுடன், ஐரோப்பிய நிறுவனங்களுடனும் தொடர்புடையது.
சிறிலங்காவுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில், சிறிலங்கா அரசாங்கத்தின் ஒப்புதல் இல்லாமல் ஓனோமிச்சி தனது பங்குகளை விற்க முடியாது.
எனவே, ஜப்பானிய-இந்திய நடவடிக்கையை நிறுத்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தலையிட வேண்டும் என்றும், ஜப்பானிய பங்குகளை விற்பனை செய்வதை எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பகிரங்கமாக எதிர்க்க வேண்டும் என்று புதுது ஜாகொட வலியுறுத்தியுள்ளார்.