சீன உர மோசடி – விவசாய அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் கைது
கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில், சீனாவில் இருந்து, இயற்கை உரத்தை இறக்குமதி செய்வதில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பாக, விவசாய இராஜாங்க அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் மகேஷ் கம்மன்பில கைது செய்யப்பட்டுள்ளார்.
2021 ஆம் ஆண்டு சீனாவின் கிங்டாவோ சீவின் பயோடெக் (Qingdao Seawin Biotech) நிறுவனத்திடம் இருந்து தரமற்ற இயற்கை உரத்தை இறக்குமதி செய்ததன் மூலம், அரசாங்கத்திற்கு 6.9 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பை ஏற்படுத்தியதாக, இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் அவர் இன்று கைது செய்யப்பட்டார்.
அவர் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டதை அடுத்து, மே 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
சீனாவின் கிங்டாவோ சீவின் பயோடெக் நிறுவனத்திடம் இருந்து, தரமற்ற இயற்கை உரத்தை இறக்குமதி செய்வது தொடர்பாக கடன் கடிதங்களைத் திறக்க, மகேஷ் கம்மன்பில அறிவுறுத்தியிருந்தார்.
பின்னர், பக்டீரியா தொற்று இருந்த அந்த உரம் சீனாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டது.
எனினும், சீனாவின் அழுத்தங்களைத் தொடர்ந்து, சீன நிறுவனத்துக்கு, 6.9 மில்லியன் அமெரிக்க டொலர்களை சிறிலங்கா அரசாங்கம் செலுத்த நேரிட்டது.