பாதுகாப்பு உடன்பாட்டை வெளியிட இந்தியாவின் இணக்கம் தேவை
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அண்மைய சிறிலங்கா பயணத்தின் போது, கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாட்டின் உள்ளடக்கங்களை வெளியிடுவதற்கு, இந்தியாவின் இணக்கம் தேவை என்று சிறிலங்கா அரசாங்கம் கூறியுள்ளது.
சிறிலங்காவின் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனை இன்று தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பாக இந்தியாவுடன் சிறிலங்கா கையெழுத்திட்ட புரிந்துணர்வு உடன்பாட்டின் உள்ளடக்கத்தை, சிறிலங்காவின் அரசாங்கம் இன்னும் வெளியிடவில்லை.
இதுகுறித்து இன்றைய செய்தியாளர் சந்திப்பில், எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த நளிந்த ஜயதிஸ்ஸ,
உடன்பாட்டின் உள்ளடக்கங்கள் பற்றிய சில தகவல்களை வெளியிடுவதற்கு எங்களுக்குள் பரஸ்பர இணக்கப்பாடு தேவைப்படுகிறது.
எதிர்காலத்தில், அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்போம். ஆனால் அதற்கு சிறிது காலம் எடுக்கும்.
கையெழுத்திடப்பட்ட உடன்பாடுகள் வெறும் புரிந்துணர்வு உடன்பாடுகள் தான். எதிர்காலத்தில் அவற்றை நாடாளுமன்றத்தில் வெளியிடுவோம்.
அதற்காக காத்திருப்பது கடினமாக இருந்தால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் சில தகவல்களைக் கோரலாம்.
சிறிலங்கா அரசாங்கம் பொறுப்புடன் புரிந்துணர்வு உடன்பாடுகளில் கையெழுத்திட்டுள்ளது.
அவை அரசியல்வாதிகளால் எடுக்கப்பட்ட முடிவுகள் அல்ல. அந்தந்த அமைச்சுக்கள், சட்டமா அதிபர் திணைக்களம், தொடர்புடைய அனைத்து நிறுவனங்களுடனும் பல மாதங்களாக ஆலோசனை நடத்தப்பட்டு கலந்துரையாடப்பட்டு, சில திருத்தப்பட்டன, சிலவற்றில் சில புதிய உட்பிரிவுகள் சேர்க்கப்பட்டன.
இவை அனைத்திற்கும் பின்னரே ஒருமித்த கருத்து அடிப்படையில் இந்த புரிந்துணர்வு உடன்பாடுகளில் கையெழுத்திட்டிருக்கிறோம்.
இந்த புரிந்துணர்வு உடன்பாடுகளின் அடிப்படையில் அடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன.
சிலவற்றிற்கு புரிந்துணர்வு உடன்பாடுகளை செயல்படுத்துவதற்கான வழிமுறைகளை நிறுவ வேண்டும் என்றும் அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சிடம், தகவல் கோரப்பட்ட போது, பாதுகாப்பு ஒத்துழைப்பு பற்றிய தகவல்கள் தமது அமைச்சின் அதிகார வரம்பிற்குள் இல்லை என்று, தகவல் உரிமை அதிகாரி பதிலளித்துள்ளார்.