மேலும்

ஆணைக்குழு அறிக்கையை ஆராய காவல்துறை அதிகாரிகள் குழு

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை ஆய்வு செய்து, விசாரிப்பதற்கு, நான்கு பேர் கொண்ட காவல்துறை அதிகாரிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா காவல்துறை பேச்சாளர், புத்திக மனதுங்க இதனை அறிவித்துள்ளார்.

மூத்த பிரதி காவல்துறை மா அதிபர் அசங்க கரவிட்ட தலைமையில் இந்தக் குழு செயற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர், , குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர், மற்றும் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் ஆகியோர் இந்தக் குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர்.

இந்தப் பிரதான குழுவின் கீழ் மேலும் பல துணைக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவை ஏற்கனவே அறிக்கையை ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளன என்றும் சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

66,000 இற்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட அறிக்கையை ஆய்வு செய்து, கண்டறியப்படும் புதிய தகவல்களின் அடிப்படையில் புதிய விசாரணைகள் தொடங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை, மேலதிக விசாரணைகள் மற்றும் நடவடிக்கைகளுக்காக, நேற்று முன்தினம் சிறிலங்கா ஜனாதிபதின் செயலாளரிடம், குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டது.

சிறிலங்கா ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் உத்தரவின் பேரில், இந்த அறிக்கை ஒப்படைக்கப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால கூறியிருந்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *