நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் – என்பிபி இரட்டைவேடம்
2024 ஆம் ஆண்டு 09 ஆம் இலக்க நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்யும் விடயத்தில், ஆளும் தேசிய மக்கள் சக்தி இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க 2024 ஆம் ஆண்டு 09 ஆம் இலக்க நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்வதற்காக தனிநபர் பிரேரணையை முன்வைத்துள்ளார்.
அது அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இதனை ஆதரிப்பதா இல்லையா என்பது குறித்து தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இன்னும் முடிவு செய்யவில்லை என்று தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நிஹால் அபேசிங்க தெரிவித்துள்ளார்.
கட்சி இந்த விடயத்தில் இன்னும் முடிவு செய்யவில்லை. நாங்கள் தற்போது தேர்தல் தொடர்பான வேலைகளில் ஈடுபட்டுள்ளோம்.
இது குறித்து கலந்துரையாட வேண்டும், ஆனால் இன்னும் வாய்ப்பு கிடைக்கவில்லை. வரும் நாட்களில் நாங்கள் கலந்துரையாடுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலைப் பாதுகாப்புச் சட்டம், தெளிவற்ற வரையறைகள் மற்றும் கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் பிரிவுகளைக் கொண்டதாக உள்ளது என்று அப்போது எதிர்க்கட்சியில் இருந்த தேசிய மக்கள் சக்தி உட்பட பல கட்சிகள் அதனை எதிர்த்தன.
அரசாங்கத்தை விமர்சிக்கும் சமூக ஊடக உள்ளடக்கத்தைக் கட்டுப்படுத்த இது பயன்படுத்தப்படலாம் என்றும் குறிப்பிடப்பட்டது.
தற்போது ஆட்சிக்கு வந்துள்ள தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்தவர்கள், இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி நீதிமன்றத்தை நாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.