மேலும்

சிறிலங்கா காவல்துறை வெற்றிடங்களை நிரப்புவதில் சிக்கல்

சிறிலங்கா காவல்துறையில் உள்ள வெற்றிடத்தை பூர்த்தி செய்வதற்கு பல ஆண்டுகள் தேவைப்படும் என, தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் பேசிய பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால,  சிறிலங்கா காவல்துறையில் தற்போது 23,170க்கும் மேற்பட்ட வெற்றிடங்கள் இருப்பதாகவும், சிறப்பு அதிரடிப்படையில் 2,076  வெற்றிடங்கள் இருப்பதாகவும் கூறியிருந்தார்.

எனினும், மட்டுப்படுத்தப்பட்ட பயிற்சி வசதிகளே  இருப்பதால் அதிக எண்ணிக்கையிலான காவல்துறை அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்ய முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ள சிறிலங்காவின் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால,

“தேர்தல் தொடர்பான பணிகள் நடந்து வருவதால் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் தாமதமாகியுள்ளன.

இந்த ஆண்டுக்குள் 5,000 காவலதுறை அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்ய திட்டமிட்டுள்ளோம்.

இப்போதைக்கு, 2,500 அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கே திறைசேரி அனுமதி அளித்துள்ளது.

ஏனைய அரசு நிறுவனங்களைப் போல, நேரடியாக காவல்துறைக்கு ஆட்சேர்ப்பு செய்ய முடியாது.

புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்படும் அதிகாரிகளுக்கு சிறப்பு பயிற்சி மற்றும் போதுமான வசதிகள் தேவைப்படுகின்றன.

புதியவர்கள் ஆறு மாத பயிற்சி பெற வேண்டும், ஆனால் சுமார் 10 பயிற்சி கல்லூரிகள் மட்டுமே உள்ளன. இதனால் வெற்றிடங்களை நிரப்புவதற்கு படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும். என்றும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *