பயங்கரவாத தடைச்சட்டத்தை நிறுத்தி வைக்க ஐரோப்பிய ஒன்றியம் அழுத்தம்
பயங்கரவாதத் தடைச் சட்டம் ரத்து செய்யப்பட்டு, புதிய சட்டம் கொண்டு வரப்படும் வரை, அதனை பயன்படுத்துவதை நிறுத்தி வைப்பது குறித்து சிறிலங்கா அரசாங்கத்துடன் ஐரோப்பிய ஒன்றியம் ஆராய்ந்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியமும், ஏனைய மேற்கத்திய நாடுகளும், சிறிலங்காவில் நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்யுமாறு வலியுறுத்தி வருகின்றன.
ஐரோப்பிய ஒன்றியத்தின், ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகையை வசதியைப் பெற்றுக் கொள்வதற்கு, பயங்கரவாத தடைச்சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என, முன்நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.
நல்லாட்சி அரசாங்கம், பயங்கரவாத தடைச்சட்டத்தை அமுல்படுத்துவதை நிறுத்தி வைத்திருந்தது.
அத்துடன் அதற்கு மாற்றீடாக, பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை அறிமுகப்படுத்தியது.
அது இன்னும் கடுமையானது என்று கூறி, ஐரோப்பிய ஒன்றியம் அந்த சட்டமூலத்தைக் கைவிடுமாறு வலியுறுத்தியது.
சிறிலங்காவின் இப்போதைய அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தைப் பயன்படுத்தி வருகின்ற நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள், அண்மைய சந்திப்புகளின் போது, பயங்கரவாத தடைச் சட்டம் குறித்தும் விசாரித்துள்ளனர்.
இதன்போது, சிறிலங்கா அரசாங்கம் இந்தச் சட்டத்தைப் பயன்படுத்துவதை நிறுத்தி வைக்க ஐரோப்பிய ஒன்றியம் ஆலோசனை கூறியுள்ளது.
இதுகுறித்து அரசாங்கம் பரிசீலிக்குமா என்ற கேள்விக்குப் பதிலளித்துள்ள, நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, அரசாங்கம் இன்னும் அதைப் பற்றி விவாதிக்கவில்லை” என்று கூறியுள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டம் விரைவில் ரத்து செய்யப்பட்டு, அதற்குப் பதிலாக ஒரு புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு இன்னும் பெயரிடவில்லை என்றும், அதுபற்றி ஒரு குழு ஆராய்ந்து வருகிறது என்றும் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, தெரிவித்துள்ளார்.