மேலும்

ஈஸ்டர் தாக்குதலில் இறந்தவர்கள் ‘விசுவாசத்தின் நாயகர்களாக’ அறிவிப்பு

சிறிலங்காவில், ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களில், தேவாலயங்களில் உயிரிழந்தவர்கள், ‘விசுவாசத்தின் நாயகர்களாக’ (Heroes of Faith) அறிவிக்கப்படவுள்ளனர்.

வரும் 21ஆம் திகதி திங்கட்கிழமை ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்று 6 ஆண்டுகள் பூர்த்தியாகும் நிலையில், வத்திக்கான் இதனை அறிவிக்க உள்ளது.

கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் அன்றைய தினம் கட்டுவாபிட்டிய தேவாலயத்தில் நடக்கும் நிகழ்வில்,  வத்திக்கானின் அறிவிப்பை வாசிப்பார் என்று கத்தோலிக்க திருச்சபையின் தகவல் தொடர்பு இயக்குநர் அருட்தந்தை ஜூட் கிரிசாந்த தெரிவித்தார்.

விசுவாசத்தின் நாயகர்கள் என்பது கத்தோலிக்க திருச்சபையால், தாங்கள் நம்பிக்கைக்காக, தங்கள் உயிரைத் தியாகம் செய்பவர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு சொல் ஆகும்.

அவர்கள் இயேசு கிறிஸ்துவுக்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த ஆண்கள் மற்றும் பெண்கள் என்று அறியப்படுவார்கள்.

அதேவேளை, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ள உண்மையைக் கண்டறிய, ஏப்ரல் 21 ஆம் திகதி வரை சிறிலங்கா அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்தது என்பது குறித்து, திருச்சபையின் நிலைப்பாட்டையும் அன்றைய தினம் பேராயர் வெளியிடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 21 ஆம் திகதி காலை 7 மணிக்கு புனித லூசியா கதீட்ரலில் இருந்து கொச்சிக்கடை புனித அந்தோணியார் ஆலயம் வரை பிரார்த்தனை ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காலை 8.30 மணிக்கு தேவாலயத்தில் ஒரு நினைவு நாள் பிரார்த்தனை நடைபெறும், இதில் இராஜதந்திரிகளும்  பங்கேற்பார்கள்.

இதனிடையே ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் ஆறாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நாடெங்கும் தேவாலயங்களில் பாதுகாப்பை பலப்படுத்த சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *