பின்கதவு வழியாக ‘குவாட்’டுக்குள் இழுக்கப்படுகிறது சிறிலங்கா
அண்மையில் இந்தியாவுடன் செய்து கொள்ளப்பட்ட பாதுகாப்பு உடன்பாட்டின் உள்ளடக்கத்தை வெளிப்படுத்த வேண்டும் என, சிறிலங்கா கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அந்தக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சிறிலங்கா அரசாங்கம் எந்த வெளிப்படைத்தன்மையும் இல்லாமல், குவாட் உறுப்பு நாடான இந்தியாவுடன் பாதுகாப்பு தொடர்பில் உடன்பாடு செய்து கொள்ள எடுத்த தீர்மானம் குறித்து, எமது கவலையையும் எதிர்ப்பையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த பாதுகாப்பு உடன்பாடு தொடர்பாக, நாட்டுக்குள் முறையான கலந்துரையாடல் அல்லது நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படாமல், செய்து கொள்ளப்பட்டிருக்கிறது.
புதிய பனிப்போர் ஒன்று ஏற்படுகின்ற, இந்து சமுத்திரத்தை இராணுவமயமாக்கும் சந்தர்ப்பத்தில், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கிறது.
இந்திய ஊடகங்களின் தகவல்களின்படி, பிராந்தியத்தில் சீனாவின் இருப்புக்கு எதிராக போராடுவதற்கான, இந்தியாவின் உத்திகளின் ஒரு பகுதியாக, இந்த பாதுகாப்பு புரிந்துணர்வு உடன்பாடு தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பாதுகாப்புக்கு, பிராந்தியத்தின் உறுதித்தன்மைக்கு எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்த எமது நிலத்தைப் பயன்படுத்துவதற்கு ஒருபோதும் இடமளியோம் என, சிறிலங்கா ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இந்திய பிரதமர் மோடிக்கு உறுதியளித்திருந்தார்.
இது தொடர்பில் எமக்கு எந்தவித எதிர்ப்பும் இல்லை. என்றாலும் பிராந்தியத்தின் உறுதித்தன்மை விடயத்தில் இந்தியாவின் அர்ப்பணிப்பு தொடர்பில் கேள்வி எழுகிறது.
இந்தியா குவாட் உறுப்பு நாடாக இருந்து, சீனாவை கட்டுப்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகளின் செயற்பாடுகளில் சம்பந்தப்பட்டிருக்கிறது.
கடந்த பெப்ரவரி மாதம் இந்திய பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின்போது, தொழில்நுட்ப பரிமாற்றம், இரண்டு நாடுகளும் இணைந்து ஆயுதங்களை உற்பத்தி செய்யும் ஒத்துழைப்பை விரிவுபடுத்தல் மற்றும் இராணுவ நடவடிக்கைகளை உறுதிப்படுத்துவதற்காக இந்தியா மற்றும் அமெரிக்கா இடையில் 10 வருட பாதுகாப்பு ஒத்துழைப்பு வரைபு குறித்து பேசப்பட்டுள்ளது.
இந்தியாவுடன் பாதுகாப்பு உடன்பாட்டிற்குச் சென்றுள்ளதன் மூலம் சிறிலங்கா, இந்தியாவின் காலனித்துவ அரசாங்கமாக- பின்கதவு வழியாக குவாட்டுக்குள் இழுக்கப்பட்டு செல்வதன் மூலம், உண்மையான அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது.
சிறிலங்கா பல நூற்றாண்டு காலமாக பின்பற்றி வந்த பிளவுபடாத வெளிநாட்டுக் கொள்கையை தொடர்ந்தும் செயற்படுத்தும் என நம்ப முடியாமல் இருக்கிறது.
சீனா போன்ற சிறிலங்காவின் பிரதான முதலீட்டாளர், சந்தை பங்காளி மற்றும் சர்வதேச நிறுவனங்களில் எமது சுயாதீனம் மற்றும் இறையாண்மைக்கு ஒத்துழைப்பு வழங்கும் நாடொன்றுக்கு இந்த உடன்பாடு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சிறிலங்கா தற்போது எந்த வெளிநாட்டு தரப்புடனும் நேரடியாக சண்டைக்கு சம்பந்தப்படாத நிலையில் பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தங்களுக்கு செல்ல வேண்டிய தேவையில்லை.
சிறிலங்கா, இறுதியாக கைச்சாத்திட்டுள்ள பாதுகாப்பு உடன்பாடு அமெரிக்கா, இலங்கை (1947, 1957) பாதுகாப்பு ஒப்பந்தமாகும்.
அது இலங்கையின் இறையாண்மை மற்றும் சர்வதேச தொடர்புகளுக்கு ஆரோக்கியமற்ற புதிய காலனித்துவ விதிமுறைகளுக்கு ஆளாகியதுடன், அது பண்டாரநாயக்க அரசாங்கத்தின்போதே கைவிடப்பட்டது.
இந்தியாவுடன் இருக்கும் பாதுகாப்பு புரிந்துணர்வு உடன்பாடு இந்து சமுத்திரத்தை தொடர்ந்தும் இராணுவ மயமாக்குவதற்கான ஒரு நடவடிக்கையாக கருத முடியும்.
அத்துடன் அது இரண்டு நாடுகளும் ஒத்துழைப்பு வழங்கிய இந்து சமுத்திரத்தை சமாதான வலயமாக பிரகடனப்படுத்தும் ஐக்கிய நாடுகளின் முயற்சியை மீறும் செயலாகும்.
இந்த நிலைமையில் இந்தியாவுடன் செய்து கொண்டுள்ள பாதுகாப்பு உடன்பாட்டின் உள்ளடக்கத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று அனைத்து ஜனநாயக மற்றும் முற்போக்கு சக்திகளும் சிறிலங்கா அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் கம்யூனிஸ்ட் கட்சி குறிப்பிட்டுள்ளது.