கைது செய்யப்பட்ட ராஜித சேனாரத்ன – மருத்துவமனையில் விளக்கமறியல்
வெள்ளை வான் கடத்தல்கள் தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பை ஒழுங்கு செய்தார் என்ற குற்றச்சாட்டில், முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன நேற்று குற்ற விசாரணைத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டார்.
மேற்படி வழக்கு குற்ற விசாரணைத் திணைக்களத்தினால் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன முன்பிணை கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனு எதிர்வரும் 30ஆம் நாளே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்த நிலையில், ராஜித சேனாரத்னவை கைது செய்ய சட்டமா அதிபர் உத்தரவிட்டார்.
அதற்கமைய கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் அவரைக் கைது செய்வதற்கான பிடியாணை உத்தரவை கடந்த 24ஆம் நாள் மாலை குற்ற விசாரணைத் திணைக்களத்தினர் பெற்றிருந்தனர்.
எனினும், அவரது வீடுகளில் நடத்தப்பட்ட தேடுதல்களின் போது, ராஜித சேனாரத்னவை கண்டுபிடித்து கைது செய்ய முடியவில்லை.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 7.40 மணியளவில் ராஜித சேனாரத்ன கொழும்பு – நாரஹேன்பிட்டியவில் உள்ள லங்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவரிடம் குற்ற விசாரணைத் திணைக்களத்தினர் வாக்குமூலம் பெற முயன்ற போதும், அவரது உடல் நிலை கருதி வாக்குமூலம் பெறமுடியாத நிலை ஏற்பட்டது.
அதுகுறித்து குற்ற விசாரணைப் பிரிவினரால் நேற்று நீதிவானின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.
இதையடுத்து ராஜித சேனாரத்னவை கைது செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதிவான் சாலினி பெரேரா உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து நேற்று பிற்பகல் 2.10 மணியளவில் ராஜித சேனாரத்னவை கைது செய்துள்ளதாக நீதிவானுக்கு குற்ற விசாரணைத் திணைக்களத்தினரால் தெரியப்படுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நேற்று மாலை லங்கா மருத்துவமனைக்குச் சென்று ராஜித சேனாரத்னவின் உடல் நிலையை பார்வையிட்ட பின்னர், அவரை மருத்துவமனையிலேயே விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
ராஜித சேனாரத்னவுக்கு ஜனவரி 6ஆம் நாள் வரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்குமாறு குற்ற விசாரணைத் திணைக்களத்தின் பொறுப்பதிகாரி கோரியிருந்த போதும், எதிர்வரும் 30ஆம் நாள் வரையே விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது,
இதையடுத்து, லங்கா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராஜித சேனாரத்ன, சிறைச்சாலை அதிகாரிகளின் பொறுப்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.