சிறிலங்கா பிரதமருடன் இந்திய கடற்படைத் தளபதி பேச்சு
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.
அலரி மாளிகையில் நேற்று முன்தினம் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போது, பாதுகாப்பு, புலனாய்வு குறித்த பல்வேறு விவகாரங்கள் தொடர்பாகப் பேசப்பட்டதாகவும், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பயிற்சிகள் குறித்து கலந்துரையாடப்பட்டது என்றும் சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அதேவேளை, நான்கு நாள் பயணத்தை முடித்துக் கொண்டு இந்திய கடற்படைத் தளபதி நேற்று முன்தினம் புதுடெல்லி திரும்பினார்.
அவர் சிறிலங்காவில் தங்கியிருந்த போது, பிரதமர் மகிந்த ராஜபக்ச, பாதுகாப்புச் செயலர் கமல் குணரத்ன, முப்படைகளின் தளபதிகள் உள்ளிட்ட பாதுகாப்பு உயர் அதிகாரிகளைச் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.
திருகோணமலைக்கும் பயணம் மேற்கொண்டிருந்த அவர், பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.