எம்சிசி உடன்பாடு ஆட்சி மாற்றத்துக்குப் பின் செல்லாது – கம்மன்பில
தற்போதைய அரசாங்கம், இரகசியமான முறையில், மிலேனியம் சவால் உடன்பாட்டில் கையெழுத்திட்டாலும், ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் அந்த உடன்பாடு செல்லுபடியற்றதாகவே கருதப்படும் என்று கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“சிறிலங்காவின் இடங்களை அமெரிக்காவுக்கு தாரை வார்த்து கொடுக்கும் மிலேனியம் சவால் உடன்பாட்டுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருக்கிறது.
அதிபர் தேர்தலுக்கு முன்னர், இந்த உடன்பாட்டில் கையெழுத்திடவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருக்கிறார்.
எனினும், பிரதமர் கூறியுள்ளது போல தேர்தலுக்கு முன்னர் இந்த உடன்பாட்டில், கையெழுத்திட முடியாது என்று அதிபர் மைத்திரிபால சிறிசேன எம்மிடம் தெரிவித்தார்.
அதிபரின் அறிவிப்பை மீறி பிரதமரும், நிதி அமைச்சர் மங்கள சமரவீரவும் எந்த சந்தர்ப்பத்திலும் இந்த உடன்பாட்டில் கையெழுத்திடத் தயாராக இருக்கின்றனர்.
இந்த உடன்பாட்டின் மூலம் 480 மில்லியன் டொலர் கிடைக்கவுள்ள நிலையில், இதில் கையெழுத்திடுவதில் என்ன தவறு என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கேள்வியெழுப்புகிறார்.
480 மில்லியன் டொலர் கிடைக்கிறது என்பதற்காக, தாய்நாட்டை காட்டிக் கொடுக்க முடியாது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.