புதனன்று கூட்டத்தில் 5 தமிழ்க்கட்சிகளின் இறுதி முடிவு
சிறிலங்கா அதிபர் தேர்தல் தொடர்பான முடிவை எடுப்பதற்காக, ஐந்து தமிழ்க் கட்சிகள் நேற்று யாழ்ப்பாணத்தில் மூன்றரை மணி நேரம் பேச்சுக்களை நடத்திய போதும், இறுதி முடிவு எடுப்பதை, நாளை வரை பிற்போட்டுள்ளன.
அதிபர் தேர்தல் குறித்த ஒருமித்த நிலைப்பாட்டை எடுப்பதற்காக, தமிழ் அரசுக் கட்சி, ரெலோ, புளொட், தமிழ் மக்கள் கூட்டணி, ஈபிஆர்எல்எவ் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் நேற்று முற்பகல் 11 மணிக்குச் சந்தித்துப் பேச்சுக்களை ஆரம்பித்தனர்.
சுமார் மூன்றரை மணித்தியாலங்கள் இந்தக் கலந்துரையாடல் நீடித்தது.
எனினும், இறுதி முடிவு எடுக்கப்படாமல், நாளை மீண்டும் கூடுவது என்ற முடிவுடன் இந்தக் கலந்துரையாடல் நிறைவு பெற்றது.
இந்தக் கலந்துரையாடலுக்குப் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட, சுரேஸ் பிரேமச்சந்திரன்,
“ஐந்து தமிழ்க்கட்சிகளும் இணைந்து, முன்வைத்த யோசனைகளை, இரண்டு பிரதான வேட்பாளர்களும், பகிரங்கமாக நிராகரித்துள்ள நிலையில், புதன்கிழமை மீண்டும் பேச்சுக்களை நடத்தி, எமது நிலைப்பாடு என்னவென்று அறிவிக்கப்படும்.
ஐந்து தமிழ்க்கட்சிகளும் எடுக்கும் நிலைப்பாட்டுக்கு தமிழ் மக்கள் ஆதரவு அளிப்பார்கள் என்று நம்புகிறோம்.” என்று கூறினார்.