சமூக ஊடகங்களில் தேர்தல் முடிவுகள் கசிவதை தடுக்க நடவடிக்கை
அதிகாரபூர்வ முடிவுகள் வெளியிடப்படுவதற்கு முன்னர், தேர்தல் முடிவுகள் சமூக ஊடகங்களில் கசிவதைத் தடுப்பதற்கு தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதற்கான, ஒழுங்குகள் குறித்து நேற்று முன்தினம், இலத்திரனியல் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் தேர்தல்கள் ஆணைக்குழு கலந்துரையாடியது.
இதன்போதே, அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட முன்னர் சமூக ஊடகங்கள் வழியாக முடிவுகள் மக்களுக்கு கசிய விடப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது,
தேர்தல் முடிவுக்கான இறுதி ஒப்புதல் வழங்கப்படும் வரை, முடிவுகள் தொடர்பான தகவல்களைப் பகிர்வதைத் தவிர்க்குமாறு, வாக்குகளை எண்ணும் மையத்தில் உள்ள முகவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்படும் என்று தேர்தல்கள் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.