யாழ்ப்பாணத்துக்கு முதலில் பகலில் மட்டும் விமான சேவை
யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்தில் அனைத்துலக தரத்திற்கு இணங்க, அனைத்து அடிப்படை வசதிகளையும் கொண்டிருக்கும் என்று சிறிலங்கா சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையினால் சான்று அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவல் வெளியிட்ட சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் அதிகாரி ஒருவர்,
”ஆரம்பத்தில் யாழ்ப்பாணம் விமான நிலையம் பகல் நேரத்தில் மாத்திரம் இயங்கும்.
விமான ஓடுபாதை சமிக்ஞை விளக்குப் பொறிமுறைகள் பொருத்தப்பட்டதும், நாள் முழுவதும் செயற்படக் கூடியதாக இருக்கும்.
அனைத்து எல்லை கட்டுப்பாட்டு முறைகளும் வழக்கம்போல செயற்படுத்தப்படும்.
அத்துடன், சுங்கத் தீர்வையற்ற வசதிகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் இங்கு கிடைக்கும்” என்றும் அவர் தெரிவித்தார்.