பலாலிக்கு அனுப்பப்படும் 15 குடிவரவு திணைக்கள அதிகாரிகள்
யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்தில் பணியாற்றுவதற்காக குடிவரவு, குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் 15 பேர் பலாலிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.
அடுத்த வாரம் யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையம், திறந்து வைக்கப்படவுள்ள நிலையில், அங்கு குடிவரவு, குடியகல்வு சோதனைகளை மேற்கொள்வதற்காக, 15 அதிகாரிகள் கொழும்பில் இருந்து அனுப்பப்படவுள்ளனர்.
குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் பி.ரத்நாயக்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
பலாலியில் குடிவரவு, குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளுக்கான தங்குமிட வசதிகள் இன்னமும் செய்து கொடுக்கப்படவில்லை.
அவர்களுக்கான தங்குமிட வசதிகள் செய்து கொடுக்கப்படும் வரை, சிறிலங்கா இராணுவத்தினரால் அளிக்கப்படும் தங்குமிட வசதிகளை அவர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள் என்றும் அவர் கூறினார்.