மேலும்

அரச கட்டமைப்புகளுக்குள் சஹ்ரான் குழு ஊடுருவல் – நாடாளுமன்ற உரைபெயர்ப்பாளரும் கைது

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களில் ஈடுபட்டு, தற்போது தடை செய்யப்பட்டுள்ள, தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்புடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்த நாடாளுமன்ற உரை பெயர்ப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராஜகிரியவில் உள்ள அவரது வதிவிடத்தில் வைத்து, இவரை குருணாகல காவல்துறையினர் நேற்று கைது செய்தனர்.

சந்தேக நபருக்கு தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்புடன் உள்ள தொடர்புகள் குறித்து சபாநாயகருக்கு அறிவித்த பின்னர், காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.

சந்தேக நபர், 2006ஆம் ஆண்டு நாடாளுமன்ற பணியாளராக இணைந்து கொண்டார்.

தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தீவிர செயற்பாட்டு உறுப்பினரான, இவர், அதன் தலைவர் சஹ்ரானின் நெருங்கிய சகாக்களில் ஒருவர் என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஏப்ரல் 21ஆம் நாள் நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பின்னர் சந்தேக நபர் சில நாட்கள் மாத்திரமே பணிக்கு வந்துள்ளார்.

குருணாகல மருத்துவமனையில் பணியாற்றும் தேசிய தவ்ஹீத் ஜமாத் உறுப்பினர் ஒருவரைக் கைது செய்ததை அடுத்தே, நாடாளுமன்ற உரை பெயர்ப்பாளர் பற்றிய தகவல்களை அவர் வெளியிட்டுள்ளார்.

தேசிய தவ்ஹீத் ஜமாத் உறுப்பினர்கள் இரகசியமாக அக்குரணவில் கூட்டங்களை நடத்தி வந்துள்ளனர் என்றும் தெரிய வந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *