சிறிலங்காவில் பல இடங்களில் பதற்றம் – 6 காவல்துறை பிரிவுகளில் மீண்டும் ஊரடங்கு
சிறிலங்காவில் ஆங்காங்கே வன்முறைகள் வெடிக்கும் சூழல் மற்றும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதை அடுத்து, உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பல காவல்துறைப் பிரிவுகளில் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, குளியாப்பிட்டிய, ஹெற்றிபொல, பிங்கிரிய, தும்மலசூரிய,ரஸ்நாயகபுர, கொபேய்கன்ன ஆகிய காவல்துறை பிரிவுகளில் இன்று பிற்பகல் தொடக்கம் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குளியாப்பிட்டிய பகுதியில் நேற்று நடத்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும், காவல்நிலையை முற்றுகையை அடுத்து, குளியாப்பிட்டிய, பிங்கிரிய, தும்மலசூரிய காவல்துறை பிரிவுகளில், இன்று அதிகாலை கொண்டு வரப்பட்ட ஊரடங்குச் சட்டம், காலை 6 மணிக்கு நீக்கப்பட்டிருந்தது.
எனினும், இன்று மதியம் பல இடங்களில் ஏற்பட்ட பதற்ற நிலையைத் தொடர்ந்து, பிற்பகல் 2 மணியில் இருந்து, குளியாப்பிட்டிய, பிங்கிரிய, தும்மலசூரிய, காவல் துறைப் பிரிவுகளுடன், ஹெற்றிபொல, காவல்துறைப் பி்ரிவிலும் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
அதேவேளை, ரஸ்நாயகபுர, கொபேய்கன்ன ஆகிய காவல்துறைப் பிரிவுகளிலும், உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் காவல்துறை ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, காவல்துறைப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.
நாளை அதிகாலை 4 மணி வரை இந்த ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.