மேலும்

வவுணதீவு கொலைகள் – 5 மாதங்களுக்குப் பின் முன்னாள் போராளி விடுதலை

மட்டக்களப்பு- வவுணதீவில், இரண்டு சிறிலங்கா காவல்துறையினர் கடந்த ஆண்டு நொவம்பர் மாதம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் போராளி அஜந்தன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

நொவம்பர் 30ஆம் நாள் நடந்த படுகொலைகளை அடுத்து, முன்னாள் போராளியான அஜந்தன் எனப்படும் கதிர்காமத்தம்பி இராஜகுமாரன் (41) குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

அண்மையில், நடந்த குண்டுத் தாக்குதல்களை அடுத்து நடத்தப்பட்ட விசாரணைகளில், இந்தப் படுகொலைகளை தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பே மேற்கொண்டது என்று சஹ்ரானின் சாரதி, கபூர் எனப்படும், ஷரீப் ஆதம் லெப்பை தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், நேற்றுக்காலை முன்னாள் போராளியான அஜந்தனை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மட்டக்களப்பு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி அவர் மீதான குற்றச்சாட்டுகளை விலக்கிக் கொள்வதாக அறிவித்தனர்.

இதையடுத்து, அவரை விடுதலை செய்ய உத்தரவிட்ட நீதிவான், 13 ஆம் நாள் முன்னிலையாக விடுதலை பத்திரத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவித்தார்.

இதையடுத்து, 5 மாதங்கள், 10 நாட்களாக தடுப்புக்காவலில் இருந்த முன்னாள் போராளி அஜந்தன் நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் விடுதலை செய்யப்பட்டார்.

அவரைக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர், வீட்டில் கொண்டு சென்று மனைவியிடம் ஒப்படைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *