மேலும்

ஜெனிவா விவகாரத்தினால் மைத்திரி – ரணில் இடையே வெடித்தது மோதல்

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடருக்கு தமது பிரதிநிதிகளை அனுப்பி, ஐ.நா தலையீடுகளை எதிர்ப்பதற்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன எடுத்துள்ள முடிவினால், அரசாங்கத்துக்குள் மோதல் வெடித்துள்ளது.

சிறிலங்கா அதிபரின் நிலைப்பாட்டை நிராகரித்துள்ள ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம், ஜெனிவா கூட்டத்தொடரில் முன்வைக்கப்படும் தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கப் போவதாகவும் அறிவித்துள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தற்போதைய கூட்டத்தொடரில், சிறிலங்கா தொடர்பான முன்வைக்கப்படவுள்ள தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்க வேண்டாம் என்று அதிபர் மைத்திரிபால சிறிசேன கோரியுள்ள நிலையிலேயே, ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது.

ஜெனிவா தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்குவதன் மூலம், உறுதியானதும், நீடித்து நிலைக்கக் கூடியமான நல்லிணக்கத்தை அடைவதற்கு சிறிலங்கா அரசாங்கம், அர்ப்பணிப்பைக் கொண்டுள்ளது என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

“இந்த நடைமுறைப்படுத்தல் செயற்பாடு, இலங்கையர்களுக்கு எதிராக தொடர்ச்சியாக சுமத்தப்படும் அனைத்துலகப் போர்க்குற்றச்சாட்டுகளில் இருந்து தடுக்கின்ற உத்தியாக இருக்கும்.

சிறிலங்காவில் நிலையான நல்லிணக்கத்தை எட்டுவதற்காக பல்வேறு உறுதியான செயல்முறைகள், முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எல்லா பொறிமுறைகளும், நல்லிணக்கச் செயல்முறைகளும், சிறிலங்கா அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன.

சிறிலங்காவின் போர் வீரர்களுக்காக முதலைக்கண்ணீர் வடிப்பவர்கள், மாலி, மேற்காபிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் சிறிலங்கா படையினர் ஐ.நா அமைதிப்படையில் நிறுத்தப்பட்டுள்ளனர் என்பதை மறந்து விட்டனர்.

ஜெனிவா தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கியதால் தான் இது சாத்தியமானது.

மேலும் இராணுவ- இராணுவ ஒத்துழைப்பு விரிவடைந்துள்ளதுடன், சிறிலங்கா படையினருக்கான பயிற்சி வாய்ப்புகளும் கிடைத்துள்ளன.

எமது படையினரின் கௌரவம் பாதுகாக்கப்பட்டுள்ளது. மனித உரிமை செயல்முறைகளின் மூலம், அனைத்துலக சமூகத்தின் நம்பிக்கை மீளப் பெறப்பட்டிருக்கிறது,

மாலியில் இறந்த இரண்டு சிறிலங்கா படையினரின் இறுதிச்சடங்குகளில் இதனை நாம் காண முடிந்தது” என்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *