வரவுசெலவுத் திட்டத்தில் சில முக்கிய யோசனைகள்
2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் இன்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு சலுகைகள், கொடுப்பனவுகளையும், திட்டங்களையும் உள்ளடக்கியதாக இந்த வவுசெலவுத் திட்டம் அமைந்துள்ளது.
வரவுசெலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள சில முக்கியமான யோசனைகள் வருமாறு –
இழப்பீடுகளை வழங்குவதற்கான பணியகத்தை உருவாக்க, 200 மில்லியன் ரூபா.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு, காணாமல் போனோருக்கான பணியகம் வழக்குகளை விசாரணைக்கு எடுக்கும் வரை மாதம் தோறும், 6000 ரூபா கொடுப்பனவு.
மண்டைதீவிலும், பேசாலையிலும் புதிய மீன்பிடித் துறைமுகங்களை அமைக்க, 1.3 பில்லியன் ரூபா ஒதுக்கீடு.
ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு ஒரு கோப்பை பால்.
வறுமை நிலையில் உள்ள 72 ஆயிரம் மாற்றுக் திறனாளிகளுக்கு மாதம் தோறும் 5 ஆயிரம் ரூபா உதவித்தொகை. இதற்காக, 4300 மில்லியன் ரூபா.
வடக்கு- கிழக்கில் 15 ஆயிரம் வீடுகள் அமைப்பு. ஏற்கனவே இதற்கு 4500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 5500 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும்.
புதிதாக திருமணமான தம்பதியினருக்கு 25 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தக் கூடிய வகையில் 6 வீத வட்டிக்கு வீடமைப்புக் கடன்.
1000 கலைப் பட்டதாரிகளுக்கு, 25 ஆயிரம் ரூபா கொடுப்பனவுடன், உள்ளகப் பயிற்சி.
க.பொத உயர்தரத்தில் அதிதிறமைச் சித்தி பெறும் மாணவர்களுக்கு ஹவார்ட், கேம்பிரிட்ஜ், மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவகத்தில் பயிலும் வாய்ப்பு. இந்த ஆண்டு 14 மாணவர்களுக்கு அனுமதி. அடுத்த ஆண்டில் 28 பேருக்கு வாய்ப்பு.
அரசாங்கப் பணியாளர்களுக்கு ஜூலை மாதம் தொடக்கம், 2500 ரூபா ஊக்குவிப்பு கொடுப்பனவு.
ஓய்வூதிய முரண்பாடுகளை தீர்க்க 12,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
வடக்கில் பனை அபிவிருத்திக்கு 2 பில்லியன் ரூபா ஒதுக்கீடு. வடக்கில் போத்தலில் கள் அடைக்கும் திட்டத்துக்கு 100 மில்லியன் ரூபா.
மடு தேவாலய அபிவிருத்திக்கு 200 மில்லியன் ரூபா.
தமிழ்மொழி மூல ஆசிரியர்களை பயிற்றுவிக்க 400 மில்லியன் ரூபா.
போர்க்காலத்தில் அழிவடைந்த பகுதிகளின் அபிவிருத்திக்கு 5 பில்லியன் ரூபா.
வடக்கில் 10 பொருளாதார மத்திய நிலையங்கள் அமைப்பு.
யாழ்ப்பாணம் மாநகரசபையை புனரமைப்பு செய்ய 700 மில்லியன் ரூபா.