சிங்கப்பூர் பிரதமருடன் சுதந்திர வணிக உடன்பாடு குறித்து பேசுவார் சிறிசேன
சிங்கப்பூருக்கு, பயணம் மேற்கொள்ளும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன், சிங்கப்பூர் பிரதமர் லீ சென் லூங் பேச்சுக்களை நடத்தவுள்ளார் என்று சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று தொடக்கம் நான்கு நாட்கள் சிங்கப்பூரில் வேலைப் பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இதன்போது, சிங்கப்பூர் அதிபர் ஹலிமா ஜேக்கப், சிறிலங்கா அதிபருக்கு மதிய விருந்து அளித்து கௌரவிப்பார்.
அத்துடன் சிங்கப்பூர் பிரதமர் லீ சென் லூங்குடனும் அவர், பேச்சுக்களை நடத்துவார் என்றும் சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதேவேளை சிங்கப்பூர் பிரதமருடனான சந்திப்பின் போது, இரண்டு நாடுகளுக்கும் இடையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கையெழுத்திடப்பட்ட சுதந்திர வணிக உடன்பாடு தொடர்பாகவும், சிறிலங்கா அதிபர் பேச்சு நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த உடன்பாடு சிறிலங்காவுக்குப் பாதகமானது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.