மேலும்

தமிழ் மக்களையும் உறவு வலயத்துக்குள் வைத்திருக்க விரும்பும் சீனா

சிறிலங்கா  மக்களுடனான தமது உறவு சிங்கள மக்களுடன் மட்டுப்படுத்தப்பட்டதல்ல என்றும், தமிழ் மக்களையும் தமது உறவு வலயத்தில் வைக்கவே விரும்புவதாகவும், சீனா தெரிவித்துள்ளது.

சிறிலங்கா அமைச்சர் மனோ கணேசன் நேற்று சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் செங் ஷியுவானைச் சந்தித்த போதே, சீனத் தூதுவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் சீனா முன்னெடுக்கும் திட்டங்கள், வேலைத்தளங்களில் தமிழ்மொழிக்குப் பதிலாக சீன மொழி இடம்பெறுவது குறித்தும், சிறிலங்காவின் மொழிக் கொள்கை புறக்கணிக்கப்படுவது குறித்தும், சீனத் தூதுவருடன், அமைச்சர் மனோ கணேசன் பேச்சு நடத்தியிருந்தார்.

இதன்போது, கருத்து வெளியிட்ட சீனத் தூதுவர் செங் ஷியுவான், “சிறிலங்கா  மக்களுடனான சீனாவின் உறவு சிங்களம் பேசும் மக்களுடன் மட்டுப்படுத்தப்பட்டதல்ல.  தமிழ் மொழி பேசும் மக்களையும் நாம் எமது உறவு வலயத்தில் வைக்கவே விரும்புகிறோம்.

சிறிலங்காவில் சீன அபிவிருத்தி மற்றும் தொழிற்திட்டங்களின் பெயர் பலகைகளில் தமிழ் மொழியை திட்டமிட்டு அவமதிக்கும் நோக்கம், எமக்கு கிடையாது.

இனிமேல் சீன நிறுவனங்களின் பெயர்ப் பலகைகள் சிறிலங்காவில் அமைக்கப்படும் போது, உங்கள் அமைச்சுடன் கலந்து பேசி அவற்றை அமைக்க எமது வணிகப் பிரிவு அதிகாரியை நியமிக்கிறேன்.

இதுவரை அமைக்கப்பட்டுள்ள தொழிற்திட்டங்களின் பெயர் பலகைகளில் இருக்கின்ற எழுத்து பிழைகள் அல்லது மொழி புறக்கணிப்பு என்பன படிப்படியாக திருத்தப்படும். அவற்றுக்கு மொழிபெயர்ப்பு போன்ற விடயங்களுக்கு நாம் உங்களை நாடுகிறோம்.

எங்கள் தூதரக பணியாளர்கள் மற்றும் இங்கு வரும் சீன குடிமக்கள்  இனிமையான தமிழ் மொழியை கற்க ஆர்வம் காட்டுகிறார்கள். அவர்களுக்கு உதவிட நான் உங்களை கோருகிறேன்.

சிறிலங்காவில் இனங்களுக்கு இடையிலான தேசிய சகவாழ்வுக்கு எம்மால் அளிக்கக்கூடிய உதவிகளை நீங்கள் கோரினால் வழங்குவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *