லும்பினியில் சிறிலங்கா அதிபருக்கு பலத்த பாதுகாப்பு
நேபாளத்துக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கௌதம புத்தர் பிறந்த இடமான லும்பினிக்குச் சென்று வழிபாடுகளை நடத்தியுள்ளார்.
பிம்ஸ்ரெக் மாநாட்டில் பங்கேற்க நேபாளம் சென்றிருந்த சிறிலங்கா அதிபர், நேற்று அந்த மாநாடு நிறைவடைந்ததை அடுத்து இன்று லும்பினிக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.
லும்பினியில் உள்ள மாயாதேவி ஆலயம் மற்றும் அசோகரின் தூண் ஆகியவற்றிலும், சிறிலங்கா பௌத்த பிக்குகளால் கட்டப்பட்ட விகாரையிலும் சிறிலங்கா அதிபர் வழிபாடுகளை செய்தார்.
பிம்ஸ்ரெக் மாநாட்டில் பங்கேற்க வந்த சிறிலங்கா மற்றும் மியான்மார் அதிபர்கள் லும்பினிக்குப் பயணம் மேற்கொள்வதை முன்னிட்டு, லும்பினியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
நேபாள இராணுவம், காவல்துறை, தேசிய புலனாய்வுத் திணைக்களம் என்பன, பைரவாவில் உள்ள கௌதம புத்த விமான நிலையத்தில் இருந்து லும்பினி வரையான பகுதியில் பலத்த பாதுகாப்பை ஏற்படுத்தியிருந்தனர்.
மோப்ப நாய்கள், நவீன தொடர்பாடல் கருவிகளுடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
மியான்மார் அதிபருக்கு எதிராக நேபாளத்தில் தஞ்சமடைந்துள்ள ரொஹிங்யா அகதிகள் போராட்டம் நடத்தலாம் என்பதாலும், சிறிலங்கா அதிபரை விடுதலைப் புலிகள் இலக்கு வைக்கலாம் என்பதாலுமே, லும்பினியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.