மோடி – மைத்திரி சந்திப்பு – விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு
இம்மாத இறுதியில் நேபாளத்தில் நடக்கவுள்ள பிம்ஸ்ரெக் மாநாட்டின் போது, ஏனைய உறுப்பு நாடுகளின் தலைவர்களுடன் இந்தியப் பிரதமர் இருதரப்பு பேச்சுக்களை நடத்த திட்டமிட்டுள்ளார் என்று இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவில் எதிர்வரும் 30ஆம், 31ஆம் நாள்களில் பிம்ஸ்ரெக் அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாடு நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
இந்த மாநாட்டின் ஒரு கட்டமாக இருதரப்பு பேச்சுக்களை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக, இந்திய வெளிவிவகார அமைச்சின் கிழக்கு பிரிவுக்கான செயலர் பிரீத்தி சரண் புதுடெல்லியில் நேற்று தெரிவித்துள்ளார்.
“ஏனைய நாடுகளின் தலைவர்களைச் சந்திக்க வாய்ப்புக் கிட்டும் என்பதால், இருதரப்பு பேச்சுக்களை நடத்த எதிர்பார்த்திருக்கிறோம்.
இதுபற்றிய சரியான நிகழ்ச்சி நிரல்கள் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இருதரப்பு கூட்டங்கள் பற்றிய விபரங்களை வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரியப்படுத்துவார்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.