கீத் நொயார் கடத்தல் – மகிந்தவின் வாக்குமூலம் நீதிமன்றில் சமர்ப்பிப்பு
ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவிடம், பெறப்பட்ட வாக்குமூலம், கல்கிசை நீதிமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்டது.
குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் மகிந்த ராஜபக்சவிடம் கடந்த வெள்ளிக்கிழமை அவரது இல்லத்தில் வைத்து மூன்று மணி நேரம் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
இந்த விசாரணைகளின் போது மகிந்த ராஜபக்ச அளித்த வாக்குமூலமே இன்று கல்கிசை நீதிவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதேவேளை, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகரவை எதிர்வரும் ஓகஸ்ட் 27ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்கவும் கல்கிசை மேலதிக நீதிவான் உத்தரவிட்டார்.
அடுத்த தவணையின் போது இவருக்கு பிணை வழங்குவது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் நீதிவான் தெரிவித்துள்ளார்.