சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளுக்கு கூடுதல் பாதுகாப்பு நிதியை வழங்கவுள்ளது அமெரிக்கா
சிறிலங்கா போன்ற நாடுகளுக்கு அதிகளவு பாதுகாப்பு நிதியை அளிப்பதற்கு வழி செய்யும், 2019ஆம் நிதியாண்டுக்கான 700 பில்லியன் டொலருக்கும் அதிகமான பாதுகாப்பு நிதி ஒதுக்கீட்டுச் சட்டத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திடவுள்ளார்.
சீனா, ரஷ்யாவுக்குப் போட்டியாக, அமெரிக்காவின் இராணுவ பலத்தை அதிகரிக்கும் நோக்கிலேயே, இந்தப் பாரிய நிதி ஒதுக்கப்படவுள்ளது.
பாரிய- பலமான இராணுவத்தைக் கட்டியெழுப்பும் அமெரிக்க அதிபரின் திட்டத்துக்கு அமைய, 716 பில்லியன் டொலர் பெறுமதியான தேசிய பாதுகாப்பு அங்கீகாரச் சட்டத்துக்கு, அமெரிக்க பிரதிநிதிகள் சபையும், செனட் சபையும் அங்கீகாரம் அளித்திருந்தன.
இந்தியா, சிறிலங்கா போன்ற ஏனைய நாடுகளுடன் நெருக்கமான பாதுகாப்பு உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதற்கு மேலதிக நிதியை வழங்குவதை இந்தச் சட்டம் நோக்காக கொண்டுள்ளது.