மேலும்

மைத்திரியுடன் ஈரானிய வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு – சிறிலங்கா அரசு இருட்டடிப்பு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஈரானிய வெளிவிவகார அமைச்சர் மொகமட் ஜவாட் ஷரீப் நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

இதன்போது, பிராந்திய மற்றும் அனைத்துலக விவகாரங்கள் குறித்து பேசப்பட்டதாக, ஈரானிய செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்தச் சந்திப்பின்போது, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு மற்றும் பழைமை வாய்ந்த உறவுகள் குறித்து குறிப்பிட்ட சிறிலங்கா அதிபர், கடந்த மே மாதம் ஈரானுக்குத் தான் மேற்கொண்ட பயணம் ஆக்கபூர்வமான ஒன்றாக இருந்தது என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பல்வேறு துறைகளில்-  குறிப்பாக, சக்தி உள்ளிட்ட துறைகளில்  தெஹ்ரான்- கொழும்பு இடையிலான ஒத்துழைப்பை மேலும் விரிவாக்குவது தொடர்பாகவும், சிறிலங்கா அதிபர் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

அனைத்துலக அமைப்புகளுடனான உறவுகளை வலுப்படுத்துவதற்கு அழைப்பு விடுத்த சிறிலங்கா அதிபர், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை விரிவாக்குவதில் எந்த தடையும் இல்லை என்றும் கூறியுள்ளார்.

அதேவேளை, சிறிலங்காவுடனான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள விருப்பம் வெளியிட்ட ஈரானிய வெளிவிவகார அமைச்சர், சக்தி, விவசாயம், தொழில்நுட்ப –பொறியியல் சேவைகள் போன்ற துறைகளில் தொடர்ந்தும் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் இணங்கியுள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரியவையும் ஈரானிய வெளிவிவகார அமைச்சர் நேற்று சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.

ஈரானிய வெளிவிவகார அமைச்சரின் சிறிலங்கா பயணம் தொடர்பாக, அந்த நாட்டு ஊடகங்கள் அதிக முக்கியத்துவம் அளித்து செய்திகளை வெளியிட்டுள்ள போதிலும், ஈரானிய வெளிவிவகார அமைச்சரின் பயணம் மற்றும் சிறிலங்கா அதிபருடனான சந்திப்புகள் தொடர்பான செய்திகளை சிறிலங்கா அரசாங்கம் இருட்டடிப்பு செய்துள்ளது.

இந்தச் சந்திப்பு தொடர்பாக இன்று காலை வரை சிறிலங்கா அதிபர் செயலகம் மற்றும் வெளிவிவகார அமைச்சின் சார்பில் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *