மேலும்

ஐதேக முக்கிய பதவிகளில் மாற்றம் – கட்சிக்குள் குழப்பம் நீடிப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய பதவிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையிலும், கட்சிக்குள் குழப்பங்கள் நீடிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐதேகவின் தலைமைத்துவத்துக்கு எதிராக அண்மையில் ஏற்பட்ட அதிருப்திகளை அடுத்து, கட்சியில் மறுசீரமைப்புகளை செய்வதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இணங்கியிருந்தார்.

கடந்த சில வாரங்களாக ஐதேகவின் உயர்மட்ட பதவிகளில் மாற்றங்களை ஏற்படுத்தும் வகையிலான சீர்திருத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதற்கமைய, ஐதேகவின் பொதுச் செயலாக அகில விராஜ் காரியவசம் தெரிவு செய்யப்பட்டார். கட்சியின் தவிசாளராக கபீர் காசிம் நியமிக்கப்பட்டார்.

அத்துடன் ஐதேகவின் தேசிய அமைப்பாளராக நவீன் திசநாயக்கவும், ஹர்ச டி சில்வா பொருளாளராகவும், ருவான் விஜேவர்த்தன பிரதி பொதுச்செயலராகவும், நியமிக்கப்பட்டனர்.

கட்சியின் பிரதித் தலைவராக சஜித் பிரேமதாசவும், உதவித் தலைவராக ரவி கருணாநாயக்கவும் தொடர்ந்தும் அதே பதவியை வகிப்பர் என்றும் முடிவு செய்யப்பட்டது.

இந்த நியமனங்களுக்கு ஐதேகவின் செயற்குழுக் கூட்டத்தில் நேற்று அங்கீகாரம் அளிக்கப்பட்டது.

அதேவேளை, ரவி கருணாநாயக்கவுக்கு மீண்டும் உதவித் தலைவர் பதவி வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, செயற்குழுவில் இருந்து விலகுவதாக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜோசப் மைக்கல் பெரேரா அறிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாசவும் கூட இந்த நியமனம் தொடர்பாக அதிருப்தியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *