மேலும்

3 நாட்களுக்குப் பின் மத்தலவில் இருந்து புறப்பட்டது இராட்சத விமானம் – 14 மில்லியன் ரூபா வருமானம்

மூன்று நாட்களாக மத்தல அனைத்துலக விமான நிலையத்தில் தரித்து நின்ற- உலகின் மிகப் பெரிய சரக்கு விமானமான அன்ரனோவ் -225 விமானம் நேற்று மாலை பாகிஸ்தான் நோக்கிப் புறப்பட்டுச் சென்றது.

மலேசியாவில் இருந்து 24 விமானப் பணியாளர்களுடன்  வந்த இந்த விமானம் மத்தல விமான நிலையத்தில் கடந்த 18ஆம் நாள் காலை 6.35 மணியளவில் தரையிறங்கியது.

எரிபொருள் நிரப்பவும், விமானப் பணியாளர்கள் ஓய்வெடுப்பதற்காகவும் தரையிறக்கப்பட்ட இந்த விமானம் நேற்று பிற்பகல் 4.45 மணியளவில் மத்தலவில் இருந்து புறப்பட்டு பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையம் நோக்கிச் சென்றது.

இந்த விமானம் மத்தல விமான நிலையத்தில் தரித்துச் சென்றதால், 14 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்தது என்று விமான நிலைய முகாமையாளர் உபுல் கலன்சூரிய தெரிவித்தார்.

இதுபோன்ற விமானங்களின் வருகைகள் சிறிலங்காவுக்கு நல்ல வருமானத்தை தேடித் தரும் என்றும் அவர் கூறினார்.

இந்த விமானத்தின் பணியாளர்களுக்கு மத்தல விமான நிலையத்தின் சார்பில் தேனீர் விருந்துபசாரமும் வழங்கப்பட்டது.

பாரிய இடவசதி தேவைப்பட்டதால், விமானத்தை தாம் மத்தல விமான நிலையத்தில் தரையிறக்கியதாக அன்ரனோவ்- 225 விமானத்தின் தலைமை விமானி தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் இந்த விமானத்தை தாம் மத்தலவில் தரையிறக்கப் போவதாக விமான தம்மிடம் தெரிவித்தார் என்றும் உபுல் கலன்சூரிய கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *