மற்றொரு அமெரிக்க உயர் அதிகாரியுடனும் சுமந்திரன் பேச்சு
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய, ஆசிய விவகாரங்களுக்கான முதன்மை பிரதி உதவிச் செயலர் அலிஸ் வெல்ஸ் அம்மையாருடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் உலகத் தமிழர் பேரவையினர் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.
நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சந்திப்பில் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை இம்மானுவல் அடிகளார், பிரித்தானிய தமிழர் பேரவையின் தலைவர் சுரேன் சுரேந்திரா உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.
நல்லிணக்கம், நீதி, பொறுப்புக்கூறல் தொடர்பாக சிறிலங்கா அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டியதன் அவசியம் தொடர்பாக கலந்துரையாடும் நோக்கிலேயே இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவர்கள் முன்னதாக, ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் ஜெப்ரி பெல்ட்மன், ஐ.நாவுக்கான அமெரிக்காவின் பதில் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி கெல்லி கியூரி ஆகியோரைச் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.