கண்டியில் காலை 10 மணியுடன் ஊரடங்கு நீக்கம்
கண்டி மாவட்டத்தில் நேற்று நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் இன்று காலை 10 மணியுடன் நீக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை அறிவித்துள்ளது.
இன வன்முறைகளால் ஏற்பட்ட பதற்றத்தை அடுத்து நேற்று பிற்பகல் 4 மணிக்கு நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் இன்று மாலை 4 மணி வரை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், பாதுகாப்பு நிலைமைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை அடுத்தும், பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காகவும், ஊரடங்குச் சட்டத்தை காலை 10 மணியுடன் நீக்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, காவல்துறை மா அதிபருக்கு உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து, இன்று காலை 10 மணிக்கு ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டது. மீண்டும் மாலை 6 மணிக்கு ஊரடங்குச் சட்டம் நடைமுறைக்குக் கொண்டு வரப்படும் என்று சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.
அதேவேளை, கண்டி மாவட்டத்தில் உள்ள மதுபான விற்பனை நிலையங்கள் அனைத்தையும் மறு அறிவித்தல் வரும் வரை, மூடுமாறு, மதுவரித் திணைக்கள ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.