பலவந்தமாக காணாமல் ஆக்கப்படுவதில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் சட்டவரைவு மீது நாளை விவாதம்
பலவந்தமாக காணாமல் ஆக்கப்படுவதில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் சட்டவரைவு மீதான விவாதம், நாளை சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
இந்தச் சட்டவரைவு மீதான விவாதம் கடந்த ஆண்டு ஜூலை 5ஆம் நாள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு பிற்போடப்பட்டது. மீண்டும் செப்ரெம்பர் 19ஆம் நாளும் இந்த விவாதம் பிற்போடப்பட்டது.
பல்வேறு தரப்புகளினதும் எதிர்ப்புகளால் அரசாங்கத்தினால் பிற்போடப்பட்ட இந்த சட்டவரைவு மீதான விவாதத்தை நாளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
சிறிலங்கா அரசாங்கம் பலவந்தமாக காணாமல் ஆக்கப்படுவதில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் ஐ.நாவின் அனைத்துலக பிரகடனத்தில் சிறிலங்கா அரசாங்கம் கடந்த 2015 டிசெம்பரில் கையெழுத்திட்டது.
அதற்கு அமையவே, பலவந்தமாக காணாமல் ஆக்கப்படுவதில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் சட்டவரைவு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சட்டவரைவு சிறிலங்கா படையினருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று கூட்டு எதிரணி எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.