பொன்சேகாவை சட்டம், ஒழுங்கு அமைச்சராக நியமிக்குமாறு மீண்டும் பரிந்துரைக்கிறது ஐதேக
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை, சட்டம், ஒழுங்கு அமைச்சராக நியமிக்குமாறு மீண்டும் பரிந்துரைப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்திருப்பதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே, சரத் பொன்சேகாவுக்கு சட்டம், ஒழுங்கு அமைச்சர் பதவியை வழங்குமாறு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், ஐக்கிய தேசியக் கட்சி பரிந்துரைத்திருந்தது. எனினும், சிறிலங்கா அதிபர் அந்தப் பரிந்துரையை நிராகரித்திருந்தார்.
அதன் பின்னர், ஐக்கிய தேசியக் கட்சி தமது தரப்பில் இருந்து வேறோருவரை இந்தப் பதவிக்கு நியமிக்க முயன்றது. எனினும், ஐதேகவைச் சேர்ந்த எவரும், அதற்கு முன்வரவில்லை.
இந்தநிலையில் மீண்டும் சரத் பொன்சேகாவின் பெயரை, சட்டம், ஒழுங்கு அமைச்சர் பதவிக்கு நியமிக்குமாறு சிறிலங்கா அதிபரிடம் பரிந்துரைக்க ஐதேக முடிவு செய்துள்ளது.
சரத் பொன்சேகாவை சட்டம் , ஒழுங்கு அமைச்சர் பதவிக்கு நியமிப்பதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.