மரைன் படைப்பிரிவை வேகமாகப் பலப்படுத்தும் சிறிலங்கா கடற்படை
சிறிலங்கா கடற்படையில் அண்மையில் புதிதாக உருவாக்கப்பட்ட மரைன் படைப்பிரிவு வேகமாக பலப்படுத்தப்பட்டு வருகிறது. குறுகிய காலத்துக்குள் மரைன் படைப்பிரிவின் மூன்றாவது அணி பயிற்சியை முடித்து வெளியேறியிருக்கிறது.
சம்பூரில் உள்ள மரைன் பற்றாலியனின் தலைமையகத்தில் நேற்றுமுன்தினம் நடந்த நிகழ்வில், 16 அதிகாரிகள் மற்றும் 123 மரைன் கொமாண்டோக்கள் பயிற்சிகளை முடித்து வெளியேறினர்.
கிழக்குப் பிராந்தியக் கடற்படைத் தளபதி றியர் அட்மிரல் நிமல் சரத்சேன இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகப் பங்கேற்று மரைன் படையணியின் புதிய கொமாண்டோக்களுக்கான பட்டிகளை அணிவித்தார்.
2017 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம், சிறிலங்கா கடற்படையின் மரைன் படைப்பிரிவின் முதலாவது அணி பயிற்சியை முடித்து வெளியேறியது. கடந்த ஒரு ஆண்டு காலப்பகுதியில் மரைன் படைப்பிரிவின் மூன்று அணிகள் பயிற்சியை முடித்து வெளியேறியுள்ளன.