பலமான கூட்டணியாக கூட்டமைப்பு போட்டியிடும் – மாவை
உள்ளூராட்சித் தேர்தலுக்கான ஆசனப்பங்கீடுகள் மற்றும் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் நேற்று 6 மணிநேரம் பேச்சுக்களை நடத்தியுள்ளன. நேற்று மாலை 3 மணிக்கு ஆரம்பித்த பேச்சுக்கள், இரவு 9 மணி வரை நீடித்தன.
யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் அரசுக் கட்சியின் தலைமையத்தில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தலைமையில், நடந்த இந்தக் கலந்துரையாடலில், தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் அதன் செயலாளர் துரைராஜசிங்கம், வடமாகாணசபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடமாகாணசபை உறுப்பினர் சத்தியலிங்கம் ஆகியோரும், ரெலோ சார்பில் அதன் பொதுச்செயலாளர் என்.சிறீகாந்தா, வடமாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணம், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் ஜனா, இந்திரகுமார் பிரசன்னா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம், ஆகியோரும், புளொட் சார்பில் வடமாகாணசபை அமைச்சர் சிவநேசன் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.
இந்தச் சந்திப்பின் முடிவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட தமி்ழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா,
“உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் கலந்துரையாடின. உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக 80 வீதமான பேச்சுக்கள் முடிவடைந்துள்ளன.
மீண்டும் நாளை, செவ்வாய்க்கிழமை மற்றொரு கலந்துரையாடல் நடத்தப்பட்டு இறுதியான முடிவுகள் எடுக்கப்படும்.
ஜனநாயகப் போராளிகள் கட்சி உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து கொள்ள விருப்பம் வெளியிட்டுள்ள ஏனைய தரப்புகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டு, நாளை இறுதி முடிவுகள் எடுக்கப்படும்.
வரும் உள்ளூராட்சித் தேர்தலில் பலமானதொரு கூட்டணியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடும்.
இதுதொடர்பான இறுதி முடிவுகள் எடுக்கப்பட்ட பின்னர் பகிரங்கமாக அறிவிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.