மேலும்

யாழ்ப்பாணத்தில் போரை நடத்திய பிரிகேடியர் மிஸ்ராவுக்கு அருணாசல பிரதேச ஆளுனர் பதவி

Brigadier B.D. Mishraஇந்திய அமைதிப்படை சிறிலங்காவில் நிலைகொண்டிருந்த போது, விடுதலைப் புலிகளுக்கு எதிராக போரை நடத்திய முக்கிய கட்டளை அதிகாரிகளில் ஒருவரான பிரிகேடியர் பி.டி மிஸ்ரா, அருணாசல பிரதேச மாநில ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் நேற்று தமிழ்நாடு, அருணாசலப் பிரதேசம், அசாம், பிகார், மேகாலயா ஆகிய மாநிலங்களுக்கான புதிய ஆளுனர்களை நியமித்துள்ளார்.

தமிழ்நாடு மாநில ஆளுனராக, பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை, இந்திய இராணுவத்தில் பணியாற்றிய ஓய்வுபெற்ற பிரிகேடியர் பி.டி.மிஸ்ரா அருணாசல பிரதேச மாநில ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரிகேடியர் பி.டி.மிஸ்ரா, 1987ஆம் ஆண்டு தொடக்கம், 1988ஆம் ஆண்டு வரை சிறிலங்காவில் இந்திய அமைதிப்படையில் பணியாற்றியவர்.

1987ஆம் ஆண்டு ஒக்ரோபர் 10ஆம் நாள், விடுதலைப் புலிகளுக்கு எதிரான ஒப்பரேசன் பவான் நடவடிக்கையை இந்திய இராணுவம் ஆரம்பித்த போது, பலாலியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி முன்னேறிய இந்திய இராணுவத்தின் 72 ஆவது காலாட்படை பிரிகேட்டின் கட்டளை அதிகாரியாக பிரிகேடியர் மிஸ்ரா பணியாற்றியிருந்தார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிராக, திருகோணமலை, யாழ்ப்பாணம், வவுனியா மாவட்டங்களில் இவர் போர் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.

கறுப்புப்பூனை எனப்படும் தேசிய பாதுகாப்புப் படைப்பிரிவின் தளபதியாக இருந்த பிரிகேடியர் மிஸ்ரா, 1993ஆம் ஆண்டு 124 பயணிகளுடன் கடத்தப்பட்ட விமானத்தை அமிர்தசரஸ் விமான நிலையத்தில் அதிரடித் தாக்குதல் நடத்தி மீட்ட கொமாண்டோ பிரிவுக்கும் தளபதியாகச் செயற்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *