வெளிவிவகார அமைச்சரரை பதவி விலகக் கோரினார் சிறிலங்கா அதிபர்? – மறுக்கிறார் ரவி
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவை, அமைச்சர் பதவியில் இருந்து விலகுமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கோரியிருப்பதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மத்திய வங்கி பிணை முறி விற்பனையில் இடம்பெற்ற முறைகேடுகளுடன் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் நிலையிலேயே, ரவி கருணாநாயக்கவுக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இந்த அறிவுறுத்தலை வழங்கியிருப்பதாக அரசாங்க வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
தொடர்ந்தும் அமைச்சராகப் பதவி வகித்தால், அரசாங்கத்துக்கு மட்டுமன்றி, அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கும் கூட பாரிய பிரச்சினையை ஏற்படுத்தும். எனவே, அமைச்சர் பதவியை விட்டு விலகுவதே நல்ல தீர்வாக இருக்கும் என்று, அமைச்சரிடம் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கூறியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நாடாளுமன்ற வாழ்வின் 40 ஆண்டு நிறைவை முன்னிட்டு வியாழக்கிழமை இரவு அலரி மாளிகையில் நடந்த விருந்துபசாரத்தின் போதே, சிறிலங்கா அதிபர் இந்த அறிவுறுத்தலை விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
வெளிவிவகார அமைச்சர் பதவியில் இருந்து விலகுமாறு தமக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அறிவுறுத்தியிருப்பதாக வெளியான செய்திகளை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க நிராகரித்துள்ளார்.
பதவியை விட்டு நான் விலக வேண்டும் என்று கேடடுக் கொள்ளப்பட்டுள்ளதாக வெளியாகிய அறிக்கைகள் மற்றும் வதந்திகள் முற்றிலும் முட்டாள்தனம் என்று அவர் கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.