முன்கூட்டியே கொழும்பு துறைமுகத்தை விட்டு வெளியேறியது அமெரிக்க போர்க்கப்பல்
அனர்த்தத்துக்குப் பிந்திய உதவிப் பணிகளை மேற்கொள்வதற்காக சிறிலங்காவுக்கு வந்திருந்த அமெரிக்க போர்க்கப்பல், ஒரு வாரத்துக்கு முன்னதாகவே கொழும்பு துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது.
அமெரிக்க கடற்படையின் யுஎஸ்எஸ் லேக் எரி என்ற வழிகாட்டல் ஏவுகணைப் போர்க்கப்பல், கப்டன் மக் பேர்சன் தலைமையிலான சுமார் 300 மாலுமிகளுடன், கடந்த 11ஆம் நாள் கொழும்புத் துறைமுகம் வந்தது.
அண்மையில் சிறிலங்காவில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், உதவிப் பணிகளை மேற்கொள்ளவே இந்தப் போர்க் கப்பல் கொழும்புக்கு வந்திருந்தது.
இந்தக் கப்பலில் இருந்த அமெரிக்க கடற்படையினர், சிறிலங்கா கடற்படையின் மரைன் படையினருடன் இணைந்து, காலி, மாத்தறை, களுத்துறை மாவட்டங்களில் பல்வேறு உதவிப் பணிகளில் ஈடுபட்டனர்.
அத்துடன் சிறிலங்கா கடற்படையினருடன் இணைந்து பயிற்சியிலும் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், யுஎஸ்எஸ் லேக் எரி போர்க்கப்பல் நேற்று தமது பயணத்தை முடித்துக் கொண்டு கொழும்பு துறைமுகத்தை விட்டு புறப்பட்டுச் சென்றது.
இந்தப் போர்க்கப்பல் இரண்டு வாரம் சிறிலங்காவில் தரித்து நிற்கும் என்றும் என்றும், ஜூன் 25ஆம் நாளே கொழும்பு துறைமுகத்தை விட்டுப் புறப்படும் என்றும், சிறிலங்கா கடற்படையினர் அறிவித்திருந்தனர்.
எனினும், முன்கூட்டியே அமெரிக்க போர்க்கப்பல் புறப்பட்டுச் சென்றமைக்கான காரணம் அறிவிக்கப்படவில்லை.