மேலும்

சம்பந்தன் – விக்கி பேச்சில் இணக்கம்? : நம்பிக்கையில்லாப் பிரேரணை கைவிடப்படலாம்

sampanthan- vigneswaranவடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் தமிழ் அரசுக் கட்சி கைவிடுவதற்கும், இரண்டு அமைச்சர்களை கட்டாய விடுப்பில் அனுப்ப எடுத்த முடிவை  முதலமைச்சர் விலக்கிக் கொள்வதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இன்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுடன் நடத்திய பேச்சுக்களை அடுத்தே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

சம்பந்தன்- விக்னேஸ்வரன் பேச்சுக்களில், முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கைவிடுமாறு தமிழ் அரசுக் கட்சி மாகாணசபை உறுப்பினர்களுக்கு தாம் உத்தரவிடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக சம்பந்தன் உறுதியளித்துள்ளார்  என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, முதலமைச்சரால் நேற்று கட்டாய விடுப்பில் செல்லுமாறு பணிக்கப்பட்ட, போக்குவரத்து அமைச்சர் டெனீஸ்வரன் மற்றும் சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் ஆகியோரை தொடர்ந்தும் அமைச்சர்களாகப் பணியாற்றுவதற்கும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் இணங்கியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

இதற்கிடையே, சற்றுமுன்னர் யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் விக்னேஸ்வரன், நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கைவிடுவது பற்றிய எந்த உறுதியான தகவலும் தமக்கு அளிக்கப்படவில்லை என்றும், அதேவேளை கட்டாய விடுப்பில் செல்ல பணித்த அமைச்சர்கள் இருவரும் விசாரணைகளில் தலையீடு செய்யப் போவதில்லை என்று தமக்கு  உறுதிமொழிகளைத் தந்தால், அவர்களைத் தொடர்ந்து பணியாற்ற அனுமதிப்பதற்கு தாம் இணங்கியுள்ளதாகவும் கூறினார்.

இதையடுத்து, வடக்கு மாகாண அரசியலில் நேற்று ஏற்பட்ட திடீர் குழப்பநிலை முடிவுக்கு வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

cm-suport (1)cm-suport (2)

இதற்கிடையே, முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு ஆதரவு தெரிவித்து வடக்கு மாகாண சபைக்கு முன்பாக இன்று மாலை 3 மணியளவில் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இதில் பல்கலைக்கழக மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

அதேவேளை, முதலமைச்சருக்கு கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான ரெலோ, ஈபிஆர்எல்எவ் என்பன ஆதரவு தெரிவித்துள்ளன. தமிழ் மக்கள் பேரவையும் முதலமைச்சருக்கு எதிரான நடவடிக்கைகளைக் கண்டித்துள்ளதுடன், நாளை கடையடைப்புப் போராட்டத்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளது.

ஒரு கருத்து “சம்பந்தன் – விக்கி பேச்சில் இணக்கம்? : நம்பிக்கையில்லாப் பிரேரணை கைவிடப்படலாம்”

  1. Uthayan says:

    Hi There !
    Please note that there was no compromise made. I have verified this with reliable sources. This may affect your credibility. Kindly do the needful.

    Thank you.
    Uthayan S. Pillai
    ( CMR 101.3 FM – Canada )

Leave a Reply to Uthayan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *