முதல்வருக்கு ஆதரவாக 15 பேர் கையொப்பம் – ஆளுனரிடம் கையளிப்பு
வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை கைவிடச் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், முதலமைச்சர் மீது நம்பிக்கை தெரிவித்து 15 உறுப்பினர்கள் நேற்று ஆளுனரிடம் கடிதங்களைச் சமர்ப்பித்துள்ளனர்.
தமிழ் அரசுக் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 22 உறுப்பினர்கள் முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை வடக்கு மாகாண ஆளுனரிடம் நேற்றுமுன்தினம் கையளித்திருந்தனர்.
இந்த நிலையில், முதலமைச்சருக்கு ஆதரவான உறுப்பினர்கள் பலரும் நேற்று அவரைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.
அதன் தொடர்ச்சியாக நேற்றிரவு மாகாண சபை உறுப்பினர்கள் சிவாஜிலிங்கம், விந்தன் கனகரட்ணம், சர்வேஸ்வரன் ஆகியோர் முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவிக்கும் கடிதம் ஒன்றை ஆளுனர் ரெஜினோல்ட் குரேயிடம் கையளித்தனர்.
இதில், எம்.கே.சிவாஜிலிங்கம், எம்.தியாகராஜா, ஜீ.குணசீலன், ஆர்.இந்திரராசா, து.ரவிகரன், கே.சிவநேசன், அனந்தி சசிதரன், க.சர்வேஸ்வரன், பொ.ஐங்கரநேசன், விந்தன் கனகரட்ணம், ஏ.புவனேஸ்வரன், செ.மயூரன், ஜீ.ரி.லிங்கநாதன், பா.கஜதீபன், ஆகியோருடன், முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் கையொப்பமிட்டுள்ளனர்.
இதன் மூலம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 30 உறுப்பினர்களில் தமிழ் அரசுக் கட்சியைச் சேர்ந்த 15 உறுப்பினர்கள் முதலமைச்சருக்கு எதிராகவும், தமிழ் அரசுக் கட்சி சார்பில் தெரிவான 2 பேர் மற்றும் ஏனைய பங்காளிக் கட்சிகளான ரெலோ, புளொட், ஈபிஆர்எல்எவ்வை சேர்ந்த 15 பேர் ஆதரவாகவும் பிளவுபட்டுள்ளனர்.